கூவத்தூரில் எம்எம்ஏக்கள் சுதந்திரமாக இருக்கிறார்களா.. காவல்துறை அறிக்கை சொல்வதென்ன?
கூவத்தூரில் சசிகலாவால் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களிடம் விசாரித்து போலீசார் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இதில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று காவல்துறையினர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஓபிஎஸ் ஒரு அணியாகவும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். அதிமுகவில் இரண்டு அணிகள் உருவானதால் தமிழகத்தில் அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.
இதனையடுத்து, ஓபிஎஸ்ஸுக்கு 6 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 119 எம்எல்ஏக்கள் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் சசிகலா தரப்பால் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 நாட்களாக எம்எல்ஏக்கள் அனைவரும் ரிசார்ட்டில் எந்த வித வெளியுலக தொடர்புமின்றி சிறைவாசிகள் போல் உள்ளனர்.
இந்நிலையில், குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா ஆகியோரை கண்டுப்பிடித்து தரக் கோரி ஆட்கொணர்வு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், எம்எல்ஏக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், எம்எல்ஏக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டதோடு, எம்எல்ஏக்களின் வாக்குமூலத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. பின்னர், கூவத்தூர் சென்ற காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி தமிழ்ச்செல்வன், ரிசார்ட்டில் உள்ள எம்எல்ஏக்கள் அனைவரிடமும் வாக்குமூலத்தை வாங்கினார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காஞ்சிபுரம் எஸ்.பி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், கீதா ஆகியோர் சுயவிருப்பத்தின் பேரில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றம் உத்தரவிட்டால் 119 எம்எல்ஏக்களையும் ஆஜர்படுத்த தயார் என்றும் காஞ்சி எஸ்பி சார்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.