அடிமைகளாக 122 அதிமுக எம்.எல்.ஏக்கள்... குமுறும் சூலூர் எம்.எல்.ஏ - 'எக்ஸ்க்ளூசிவ்' வீடியோ
அதிமுகவில் எம்.எல்.ஏக்கள் அடிமைகள் போல் உள்ளனர். யாரோ ஒரு குரூப் அவர்களின் சுயநலத்துக்காக ஏதேதோ செய்துகொண்டிருக்கிறது என சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் வேதனையுடன் கூறியுள்ளார்.
கோவை: சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியதும் தெரியாது. நீக்கியதும் தெரியாது. அதுபோல் தான் தினகரனை நீக்கியதும் தெரியாது. சுயநலத்துக்காக ஒரு குரூப் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் கூறியுள்ளார்.
சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் சமீபகாலமாக சிக்கலில் மாட்டி வருகிறார். திருப்பூர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்திய போது, அவரை சிறைபிடித்து வைத்தனர்.
போலீசார் அவரை மீட்க வந்தபோதுதான் அங்கு பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும் ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் அறைந்தார். அது தமிழகம் முழுவதும் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில், கனகராஜ் எம்.எல்.ஏ தனது உள்ளக் கிடங்கிலிருந்த வேதனைகளை பகிர்ந்த கொண்ட வீடியோ ஒன்று கிடைத்துள்ளது. அதில்,'' எனக்கெல்லாம் சசிகலாவை பொதுச் செயலாளராக ஆக்கியதும் தெரியாது. நீக்கியதும் தெரியாது. பேப்பரில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். போட்டோம். ஆனால் அது பொதுச்செயலாளராக்குவதற்கான கையெழுத்து என்று தெரியாது.
அதுபோலத்தான், தினகரனை துணை பொதுச்செயலாளர் ஆக்கியதும் நீக்கியதும் யாருக்கும் தெரியாது. யாரோ ஒரு குரூப் அவர்களின் சுயநலத்துக்காக ஏதேதோ செய்துகொண்டிருக்கிறது. அதற்கு நாங்கள் 122சட்டமன்ற உறுப்பினர்கள் அடிமைபோல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்''என தன் மனதிலுள்ளதை வேதனையுடன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
அவர் 'சுயநல குரூப்' என்று யாரை குறிப்பிட்டார் என்பதுதான் குழப்பமாக உள்ளது.