அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விலை போய்விட்டனர் - நடிகர் ஆனந்தராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு
அதிமுக எம்எல்ஏக்கள் விலை போய்விட்டனர் என நடிகர் ஆனந்த் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் மன்னார்குடி கும்பலுக்கு விலை போய்விட்டதாக நடிகர் ஆனந்த்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு மறு தேர்தலை நடத்துவதே ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக மன்னார்குடி கும்பலின் கைக்கு சென்றது. இதனை விரும்பாத நடிகர் ஆனந்த்ராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். சசிகலாவுக்கு எதிராகவும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் ஆனந்த்ராஜ் எதற்கு இந்த அவசரம் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் நடிகர் ஆனந்த்ராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது உண்மையான அதிமுக எது என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தொண்டர்களுக்கு உள்ளது என நடிகர் ஆனந்த்ராஜ் கூறியுள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் மன்னார்குடி கும்பலுக்கு விலை போய்விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மறுத்தேர்தல் நடத்துவதே இதற்கு ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவர வேண்டும் என்று சென்னையில் நடிகர் ஆனந்தராஜ் வலியுறுத்தியுள்ளார்.