புதுச்சேரி சட்டசபையை இழுத்து மூடி பூட்டுப் போட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.. பரபரப்பு!
புதுச்சேரி சட்டசபைக்கு பூட்டு போட்டு அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி: சட்டசபைக்கு பூட்டு போட்டு அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிதிநிலையை காரணம் காட்டி புதுச்சேரி கவர்னர் ஒப்புதல் தர மறுத்துவிட்டதால் புதுச்சேரி மக்களுக்கு, பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில், அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது, பச்சரிசி உள்ளிட்ட இலவச பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.
ஆளுநர் அனுமதியில்லை
தற்போது, கவர்னர் கிரண்பேடிக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால், கவர்னர் கிரண்பேடி, இலவச அரிசி, தீபாவளிக்கு இலவச சர்க்கரை வழங்கும் திட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கவில்லை.
அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம்
தற்போது பொங்கலுக்கு இலவச பொருட்கள் வழங்குவதற்கும் அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி மக்களுக்கு இலவச பொங்கல் பரிசு வழங்கப்படாததைக் கண்டித்து எம்.எல்.ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுவை சட்டசபைக்கு பூட்டு
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பூட்டு போட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலவச பொங்கல் பரிசு மற்றும் இலவச துணி ஆகியவற்றை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
போராட்டம் தொடரும்
மேலும் ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இலவச பொங்கல் பரிசு உள்ளிட்டவை வழங்கப்படும் என முதல்வர் உத்தரவு அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் பூட்டுப்போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.