முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா எப்போது? இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம்?
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் இன்னமும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யாததும் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்காததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனிடையே இன்று சென்னையில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வராக 5-வது முறையாக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்க உள்ளார்.
ஆனால் இந்த பதவியேற்பு எப்போது? செய்தியாளர்களையும் கட்சித் தொண்டர்களையும் ஜெயலலிதா சந்திப்பது எப்போது? என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கிறது.
அதே நேரத்தில் அஷ்டமி, நவமியால்தான் ஜெயலலிதா கட்சி அலுவலகத்திற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் தொண்டர்கள் நேற்று போயஸ் கார்டனிலும், கட்சியின் தலைமை அலுவலகத்திலும் குவிந்தனர். நடிகர்களும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரும் கட்சி அலுவலகத்திற்கு வந்து சென்றனர்.
கர்நாடக நீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனேயே முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்ர நடைமுறைகள் இருப்பதால் அவர் பதவி ஏற்கும் தேதி உடனடியாக முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு ஏற்பார் என்று தெரிகிறது. அவரை முதல்வராக தேர்வு செய்வதற்காக சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று அல்லது நாளை நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து உறுதியான தகவல் எதையும் அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிடவில்லை.
அதேநேரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க தயாராக இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரு மனதாக ஜெயலலிதாவை சட்டமன்ற கட்சி தலைவராகவும், முதல்வராகவும் தேர்ந்து எடுப்பார்கள்.
இந்த கூட்ட முடிவில் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரிடம் அளிப்பார். பின்னர் முதல்வராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநர் ரோசையாவிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொடுப்பார்கள்.
இந்த நிகழ்வுகளுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்கும் தேதி அறிவிக்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் ஆளுநர் மாளிகையில் ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்பார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்பார்கள்.
ஜெயலலிதா பதவி ஏற்பு ஆளுநர் மாளிகையில் எளிய விழாவாக நடைபெறும் என்று தெரிகிறது. முதல்வராகப் பதவியேற்ற பிறகு ஜெயலலிதா ஏதாவது ஒரு தொகுதியில் நின்று தேர்தலை சந்திப்பார்.