அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவு.. தினகரன் விமர்சித்தால் வாய்திறக்கக்கூடாது என மேலிடம் உத்தரவு!
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவுபெற்றது.
Recommended Video
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவுபெற்றது. சட்டசபையில் டிடிவி தினகரன் அரசை விமர்சித்தால் எம்எல்ஏக்கள் யாரும் குறுக்கிட வேண்டாம் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
104 எம்எல்ஏக்கள் பங்கேற்பு
இதில் அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்தக் கூட்டத்தில் 104 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர்.
அமைச்சர்கள் வரவில்லை
7 எம்எல்ஏக்கள் சொந்தக்காரணங்களால் பங்கேற்க முடியவில்லை என கட்சி தலைமைக்கு தெரிவித்தாக கூறப்பட்டது. கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, பவுன் ராஜ், பிரபு, ஆறுகுட்டி, பாஸ்கரன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் கூட்டத்திற்கு வரவில்லை.
சபரிமலைக்கு பயணம்
அவர்களில் பலர் சபரிமலைக்கு சென்றுள்ளதாகவும் சிலர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் அரசு விழாக்களில் பங்கேற்க சென்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்களுடன் ஆலோசனை
வரும் 8ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அதில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினர்.
குறுக்கிட வேண்டாம்
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டசபைக்கு வரும் டிடிவி தினகரன் அரசை விமர்சித்தால் குறுக்கிட வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு கொறடா உத்தரவை அதிமுக எம்.எல்.ஏக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.