அமைச்சர் சம்பத்தை நீக்குக- கடலூரில் வெடிக்கும் கலகக் குரல்!
அமைச்சர் சம்பத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கடலூரில் எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத்தை நீக்கியாக வேண்டும் என கடலூர் மாவட்ட 2 எம்.பி.க்கள், 4 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்றியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்.எல்.ஏக்கள் குடைச்சல் அனைத்து திசைகளில் இருந்தும் திடீர் திடீரென வந்து கொண்டிருக்கிறது. இப்போது இந்த நெருக்கடி கடலூரில் இருந்து கிளம்பியுள்ளது.
அதிமுகவினர் எதிர்ப்பு
கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் சம்பத்துக்கு எதிராக 90%க்கும் அதிகமான அதிமுக நிர்வாகிகள் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் எவரையுமே அமைச்சர் சம்பத் மதிப்பதில்லை என்பது புகார்.
எம்பி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு
இதனால் கடலூர் மாவட்டத்தின் 4 எம்.எல்.ஏக்கள் மற்றும் 2 எம்.பி.க்கள் எடப்பாடியை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளனர். அமைச்சர் சம்பத்தை நீங்கள் நீக்காவிட்டால், கடலூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை புறக்கணிப்போம்; அது உங்களுக்கு பெரும் அவமானமாகிவிடும் என கூறியுள்ளனர்.
ஏமாற்றம்
ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் இதுபற்றி பேசலாம் என கூறி சமாதானப்படுத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. ஆனால் அமைச்சர் சம்பத் விவகாரத்தில் எந்த ஒரு முடிவையும் அவர் எடுக்கவில்லை.
புறக்கணிப்பு
இதனால் தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில் முதல் கட்டமாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாட்டுக்காக கால்கோள் நடும் நிகழ்ச்சியை 4 எம்.எல்.ஏக்களும் 2 எம்.பி.க்களும் புறக்கணித்துவிட்டனர். நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி காற்றுவாங்கத்தான் போகிறது என்கின்றனர் கடலூர் அதிமுகவினர்.