மாறி மாறி கூட்ட சொல்றாங்களே... 100 நாள் நீடிப்போமா? - குழம்பும் ஈபிஎஸ்
ஒரு பக்கம் சட்டசபை, மறுபக்கம் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் என மாறி மாறி கூட்ட சொல்வதால் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தில் இருக்கிறாராம்.
சென்னை: சட்டசபையை கூட்டச்சொல்லி ஒருபக்கம் திமுக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதற்காக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மறுபக்கம் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டச் சொல்லி அதிமுக எம்எல்ஏக்கள் 8 பேர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
எந்த நேரத்தில் முதல்வராக பதவியேற்றாரோ எடப்பாடி பழனிச்சாமி நித்தம் நித்தம் கண்டம்தான். எதிர்கட்சியினர் குடைச்சல், பங்காளிகள் ஓபிஎஸ் அணியின் நெருக்கடி மறுபக்கம் என மாறி மாறி பிரச்சினையில் சிக்கி தவிக்கிறார்.
இது போதாது என்று எடப்பாடி பழனிச்சாமி அணியின் ஆதரவு எம்எல்ஏக்களே அவருக்கு குடைச்சர் கொடுப்பதோடு எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டச் சொல்லி 8 பேர் இன்று நேரடியாக சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
சட்டசபையை கூட்டுங்க
பட்ஜெட் தாக்கல் செய்தததோடு மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவில்லை. இதனால் சட்டசபையை கூட்ட வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆட்சி கலைந்து விடுமா?
சட்டசபையை கூட்டினால் ஆட்சி கலைந்து விடும் என்ற அச்சத்தினாலேயே எடப்பாடி பழனிச்சாமி, சட்டசபையை கூட்ட மறுப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
8 எம்எல்ஏக்கள் போர்க்கொடி
செந்தில் பாலஜி, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் இன்று நேரடியாகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியுள்ளனர்.
செங்கோட்டையனுடன் பேச்சு
தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்த பின்பு தோப்பு வெங்கடாசலம் அணியினர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறையில் தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர்.
அமைச்சர் பதவி
மாஜி அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவியில் அமரவேண்டும் என்ற ஆசை அதிகரித்துள்ளது. அதோடு கூவத்தூரில் கொடுத்த வாக்குறுதியை நினைவு படுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு அவரது இன எம்எல்ஏக்களே நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
100 நாள் நீடிப்பாரா?
எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று இன்னும் சில தினங்களில் 100 நாள் நிறைவடைய உள்ளது. எதிர்கட்சியினர் ஒருபக்கம், உட்கட்சி எம்எல்ஏக்கள் மறுபக்கம் என மாறி மாறி குடைச்சல் கொடுத்து வருவதால் 100 நாளை தாண்டுவோமா? என்று யோசிக்கத் தொடங்கிவிட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி.