அவ்வை சண்முகம் சாலையை அதிர வைத்த அதிமுக எம்.எல்.ஏக்களின் கைத்தட்டல்...!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின்போது பேச்சை விட கைத்தட்டலே அதிகம் இருந்தது. அதிமுக எம்.எல்.ஏக்களின் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது என்று கூறும் அளவுக்கு ஜெயலலிதா தேர்வின்போது அனைவரும் கைத்தட்டி உற்சாகமாக ஜெயலலிதா பெயரை வரவேற்றனர்.
இன்று காலை 7 மணியளவில் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்தது. இதற்காக அதிகாலையிலேயே அனைவரும் வந்து சேர்ந்தனர்.
வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு உள்ளே சென்றனர். அதன் பின்னர் ஜெயலலிதாவை சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதாவை தேர்வு செய்யும் படலம் நடந்தது.
கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் மட்டுமே பேசினார். எழுதி வைத்த பேச்சை அவர் வாசிக்கத் தொடங்கியது முதல், ஜெயலலிதாவை சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்வு செய்யும் வரை, ஜெயலலிதாவின் பெயரை அவர் சொன்னபோதெல்லாம் அதிமுக எம்.எல்.ஏக்கள் கைத்தட்டியபடியே இருந்தனர்.
குறிப்பாக சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுவதாக அவர் அறிவித்தபோது சில நிமிடங்களுக்கு கைத்தட்டல் நீடித்து கூட்ட அரங்கையே அதிர வைத்தது.
ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏக்கள் கைத்தட்டி வந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் வேறு பலத்த கரவொலி எழுப்புமாறு கேட்டுக் கொண்டார். இதனால் கைத்தட்டல் சத்தம் விண்ணைத் தொட்டது.