தினகரனை கட்சியிலிருந்து விலக வலியுறுத்திய அதிமுக எம்பிக்கு கொலை மிரட்டல்!
அதிமுக எம்பி கோ.அரிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
திருத்தணி: அதிமுக எம்பி கோ.அரிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பி கோ.அரி
அதிமுகவை விட்டு டிடிவி தினகரன் விலக வேண்டும் என வலியுறுத்தினார். சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கிவைப்பதில் அதிமுகவில் ஒருமித்த கருத்து நிலவுகிறது என்றும் எம்பி கோ.அரி கூறினார்.
அவரது இந்தப் பேச்சுக்கு தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் எம்பி கோ.அரிக்கு மர்மநபர்கள் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அரி போலீஸில் புகார் அளித்துள்ளார். தனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆளும் கட்சியை சேர்ந்த எம்பி ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.