அதிமுகவை விட்டு டிடிவி தினகரன் விலக வேண்டும்... அதிமுக எம்பி பரபர!
அதிமுகவை விட்டு டிடிவி தினகரன் விலக வேண்டும் என அதிமுக எம்பி கோ.அரி வலியுறுத்தியுள்ளார்.
திருத்தணி: அதிமுகவை விட்டு டிடிவி தினகரன் விலக வேண்டும் என அதிமுக எம்பி கோ.அரி வலியுறுத்தியுள்ளார். சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கிவைப்பதில் அதிமுகவில் ஒருமித்த கருத்து நிலவுகிறது என்றும் எம்பி கோ.அரி கூறியுள்ளார்.
டிடிவி தினகரனை எடப்பாடி தலைமையிலான அணி ஒதுக்கிவைத்துள்ளதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து சசிகலாவையும் கலந்தாலோசிக்காமல் எடப்பாடி அரசு தன்னிச்சையாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
அண்மையில் குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார். சசிகலாவின் ஒப்புதல் இல்லாமல் அவர் அறிவித்ததாக தினகரன் தரப்பு குற்றம்சாட்டியது.
தனித்துவிடப்பட்ட தினகரன்
இதைத்தொடர்ந்து பாஜக கேட்காதபோதே தனியாக அறிக்கை விட்டு தனது அணியின் ஆதரவு பாஜகவுக்குதான் என்றார் டிடிவி தினகரன். இவை எல்லாமே தினகரன் தனித்துவிடப்பட்டதை வெளிப்படுத்தியது.
தினகரன் விலக வேண்டும்
இந்நிலையில் அதிமுக எம்பியான கோ.அரி திருத்தணியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவை விட்டு டிடிவி தினகரன் விலக வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தம்பிதுரையால் குழப்பம்
சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கிவைப்பதில் அதிமுகவில் ஒருமித்த கருத்து நிலவுகிறது என்றும் எம்பி கோ.அரி தெரிவித்தார். லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தனது சொந்த கருத்துகளை கூறி குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி குற்றம்சாட்டினார்.
தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து
சசிகலா குறித்து தம்பிதுரை கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கோ.அரி கூறினார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பி அருண்மொழித்தேவனும் சசிகலாவுக்கு ஆதரவாக தம்பிதுரை பேசுகிறார் என குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.