காவிரி வாரியம் அமைக்காவிட்டால் மழைக்கால கூட்டமும் முடங்கும்... மைத்ரேயன் எச்சரிக்கை!
மே 3ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிடில் மழைக்கால கூட்டமும் முடங்கும் என்று அதிமுக எம்.பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை : மே 3ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் மழைக்கால கூட்டத்தொடரும் முற்றிலுமாக முடங்கும் என்று அதிமுக எம்.பி மைத்ரேயன் முகநூலில் தெரிவித்துள்ளார். காவிரி வாரிய விவகாரத்தில் மத்திய அரசு விரைவில் நல்ல முடிவை எடுக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வை எதிர்க்கட்சிகளை முடக்கியதை கண்டித்து பாஜக சார்பில் இன்று உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகாவிலும், பாஜக எம்பிகள் அந்தந்த தொகுதிகளிலும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக எம்.பி மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் காவிரித்தாய் தமிழக மக்களின் உணர்வுகளோடும் மனதோடும் பின்னிப்பிணைந்தவள். மத்திய அரசு காவிரி உரிமையை தர மறுக்கும் போது, நீதிமன்றங்கள் மூலம் ஜெயலலிதா சட்டப்போராட்டங்களை நடத்தினார். ஜெயலலிதாவின் முயற்சியால் 2013ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் அரசிதழில் வெளியிட்டது.
அதன் பிறகும்கூட 2013 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த ஐபிஏ அரசும், 2014க்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் நடுநிலையோடு செயல்பட வேண்டிய மத்திய அரசு தேர்தலை காரணம் காட்டி மாற்று பாதையை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த சூழலில் அதிமுக எம்பிகள் நாடாளுமன்றத்தை முடக்கும் நிலை ஏற்பட்டது. இன்று பாஜக எம்பிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றம் எம்பிகளால் சிறைபிடிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மே 3ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இல்லையென்றால் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் முற்றிலுமாக முடங்கியது போல மழைக்கால கூட்டத்தொடரும் முற்றிலுமாக முடங்குமா என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே மத்திய அரசு காவிரி விவகாரத்தில் நல்ல முடிவை எடுக்கும் என நம்புவதாக மைத்ரேயன் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.