மோடி உத்தரவு.. ஜெ. அனுமதி... கிராமங்களைத் தத்தெடுத்த 37 அதிமுக எம்பிக்கள்!
சென்னை: தமிழ்நாட்டில் அ.தி.மு.க எம்.பி.க்கள் ஒவ்வொரு கிராமங்களை தத்தெடுத்து அவற்றை மேம்படுத்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அறிவித்த திட்டம்தான் சன்சாத் ஆதார்ஷ் கிராம யோஜனா திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் வரும் 2016ஆம் ஆண்டிற்குள், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது தொகுதிக்குட்பட்ட வளர்ச்சி அடையாத ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அதன் உள்கட்டமைப்பினை மேம்படுத்த வேண்டும். 3 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் பேர் கொண்ட வளர்ச்சி அடையாத கிராமங்களை மற்றும் ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் பேர் கொண்ட, மலைகிராமங்களை இத்திட்டத்தின் கீழ் தத்தெடுக்கலாம்.
இதைத் தொடர்ந்து எம்.பிக்கள் தத்தமது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிராமங்களைத் தத்தெடுத்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் 37 அதிமுக எம்.பிக்களும் ஆளுக்கு ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளனர். குறைந்தது 3 ஆயிரம் மக்கள் தொகை முதல் 5 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராமமாக பார்த்து தத்தெடுத்து வளர்ச்சி பணிகளை செய்து கொடுக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேறும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இதை அவர்கள் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. சார்பில் 37 லோக்சபா எம்.பி.க்களும், 11 மேல் சபை எம்.பி.க்களும் உள்ளனர்.
இதில் லோக்சபா எம்.பி.க்கள் 37 பேரும் அவர்களது தொகுதியில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதன் விவரத்தை அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.