காவிரி பிரச்சனையில் மாற்றான் தாய் மனப்பான்மையை மத்திய அரசு கைவிட வேண்டும் : தமிழக விவசாயிகள்
தமிழகத்தைப் பழிவாங்கும் மாற்றான் தாய் மனப்பான்மையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Recommended Video
திருச்சி : தமிழகத்தை பழிவாங்க வேண்டும் என்கிற மாற்றான் தாய் மனப்பான்மையை விடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்ற வழங்கிய ஆறு வார கால கெடு முடிவடைய உள்ள நிலையில், இதுவரை மத்திய அரசு இந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழக விவசாயிகள் சங்கத்தினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும் தமிழ்நாட்டை பழிவாங்க வேண்டும் என்கிற மாற்றான் தாய் மனப்பான்மையிலேயே மத்திய அரசு செயல்பட்டு வருவதை உடனடியாக கைவிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று மேடைகளில் பேசி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அப்படி இருக்கையில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மட்டும் என்ன சுணக்கம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இரண்டு வார காலமாக நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளோம் என்று அதிமுக எம்.பி.,க்கள் சொல்வது எல்லாம் வெறும் கண் துடைப்பே. உடனடியாக, தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்.
அடுத்தகட்ட நடவடிக்கையாக தமிழக அரசியல்கட்சிகள், விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் வியாபார சங்கத்தினரை அழைத்து கூட்டம் நடத்தி மாநிலம் தழுவிய மாபெரும் பந்தை தமிழக அரசு நடத்திக்காட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.