தேசியக் கொடியை எப்படிக் கேவலப்படுத்தியுள்ளார் பாருங்கள் இந்த அதிமுக நகராட்சித் தலைவர்!
சென்னை: சென்னை அருகே பம்மல் பகுதியில் நகராட்சித் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த இளங்கோவன், சுதந்திர தினத்தன்று நடந்த கொடியேற்று விழாவின்போது செல்போனில் பேசியபடி கொடியை ஏற்றிய செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அவர் மீது தற்போது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, பம்மல், அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சித் தலைவரும், அதிமுகவைச் சேர்ந்தவரும், வழக்கறிருமான இளங்கோவன் அழைக்கப்பட்டிருந்தார்.
கொடியேற்றும் நிகழ்ச்சிக்காக, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள், பம்மல் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பெற்றோர் பெருமளவில் கூடியிருந்தனர். காலை 9 மணியளவில், அதிமுக தொண்டர்களுடன் தடபுடலாக ஆரவாரமாக வந்து சேர்ந்தார் இளங்கோவன்.
இறங்கும்போதே காதில் செல்போனைச் சொருகிக் கொண்டு பேசியபடிதான் இறங்கினார். கீழே இறங்கியும் கூட பேச்சை நிறுத்தாத அவர், அப்படியே கொடிமரம் இருந்த இடத்திற்குப் போனார். அங்கு போயும் கூட காதிலிருந்து செல்போனை எடுக்கவில்லை. மாறாக படு பிசியாக பேசியபடியே கொடி ஏற்றத் தலைப்பட்டார்.
அப்போதும் கூட செல்போனை எடுக்கவில்லை. மாறாக ஏர் செல் விளம்பரத்தில் வருவது போல செல்போனை அப்படியே தனது இடது தோள்பட்டையில் அண்டக் குடுத்துக் கொண்டு பேசியபடியே கொடியை ஏற்றினார். கொடி ஏற்றி முடித்த பிறகும் கூட செல்போனை விடவில்லை. மாறாக இப்போது தோள்பட்டையிலிருந்து போனை கைக்கு மாற்றி தொடர்ந்து பேசியபடியே அங்கிருந்து யாரையும் கண்டு கொள்ளாமல் அவர் பாட்டுக்குப் பேசியபடி கிளம் காரில் ஏறிப் போய் விட்டார்.
இளங்கோவனின் இந்த செயல் அங்கிருந்த அனைவரையும் அதிர வைத்தது. தேசியக் கொடியை இப்படியா கேவலப்படுத்துவார் இளங்கோவன் என்று அனைவரும் அதிர்ந்து போயினர். ஆனால் அதை யாருமே கண்டிக்க முன்வரவில்லை.
இளங்கோவன் தேசியக் கொடியையும் மதிக்கவில்லை. தேசத்தையும் மதிக்கவில்லை, சுதந்திரத்தையும் மதிக்கவில்லை. எதையுமே மதிக்காமல் மிகக் கேவலமாக நடந்து கொண்டுள்ளார்.
இந்த செயல் குறித்து தற்போது சங்கர் நகர் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. போலீஸார் புகாரை வாங்கிக் கொண்டுள்ளனர். அதேசமயம், புகாருக்குள்ளானவர் அதிமுக காரர் என்பதாலும், நகராட்சித் தலைவர் என்பதாலும், வழக்கறிஞர் என்பதாலும் வழக்கு பாயுமா என்பது சந்தேகம்தான்.
ஆனால் தேசத்தையும், சுதந்திர தினத்தையம், தேசியக் கொடியையும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட இந்த இளங்கோவனை குறைந்தபட்சம் கட்சியை விட்டு முதல்வர் ஜெயலலிதா நீக்க வேண்டும் என்று பம்மல் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.