அதிமுகவில் ஆகஸ்ட் புரட்சி... ஓபிஎஸ்,ஈபிஎஸ், டிடிவி தினகரன்- ஜெயிக்கப் போவது யாரு?
அதிமுகவில் ஆகஸ்ட் புரட்சி அரங்கேறப்போகிறது. இதில் ஜெயிப்பது யார் என்பதுதான் இப்போதய கேள்வி.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் இன்னும் சில தினங்களில் பரபரப்படையப் போகிறது. காரணம் டிடிவி தினகரனின் வருகைதான். ஆகஸ்ட் மாத புரட்சி அதிமுகவில் அரங்கேறப்போகிறது. கட்சியும் ஆட்சியும் யார் வசமாகப் போகிறது என்பதே அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு
அதிமுக அணிகள் இணைய தினகரன் கொடுத்த கெடு முடிய இன்னும் 3 நாட்கள் தான் இருக்கிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி கட்சி அலுவலகத்திற்கு வரப்போவதாக கூறியுள்ளார். இது எடப்பாடி பழனிச்சாமி அணியை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆட்சியை அப்புறம் பார்க்கலாம் கட்சியை முதலில் கைப்பற்றுவோம் என்பதே டிடிவி தினகரனின் திட்டம். இதற்காகவே காய் நகர்த்தி வருகிறார். அவருக்கு ஏற்றார்போல சந்தர்ப்ப சூழ்ந்நிலைகளும் மாறி வருகின்றன என்றே அதிமுக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இணைந்த கைகள்
சசிகலாவின் அண்ணன் மனைவி சந்தானலட்சுமியின் மரணம் துக்க நிகழ்வுதான் என்றாலும், அங்கே திவாகரனும், தினகரனும், இளவரசி மகன் விவேக், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்தது அதிமுகவினருக்கு மகிழ்ச்சியான விசயம்.
பொறுத்திருந்து பாருங்க
சாவு வீட்டில் அரசியல் பேசக்கூடாது என்று டிடிவி தினகரன் சொன்னாலும், திவாகரன் அரசியல்தான் பேசினார். சக்ரவியூகத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் அபிமன்யூ போல இருக்கும் அதிமுகவை மீட்போம் என்று கூறியுள்ளார்.
ஆகஸ்ட் புரட்சி
டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் தங்கள் பங்குக்கு மிக முக்கிய அரசியல் மாற்றம் ஏற்படப்போகிறது என்று வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 5ல் தினகரன் அதிமுக தலைமை அலுவலகம் வரப்போவது உறுதி.
அவசர ஆலோசனை
ஆட்சியையும், கட்சியையும் வசப்படுத்தியுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்கள், அமைச்சர்களுடன் சட்டசபையில் ஆலோசனை நடத்தியுள்ளார். எனினும் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் இன்று மாலை கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்போவதாக தகவல் வெளியாகிறது.
ஆகஸ்ட் 5ல் என்ன நடக்கும்
டிடிவி தினகரனை துணைப்பொதுச்செயலாராக நியமித்தார் சசிகலா. திகார் சிறைக்கு சென்ற பின்னர் அமைச்சர்கள் ஒதுக்கி வைத்தாக அறிவித்ததால் அவர் இன்னமும் கட்சி அலுவலகம் செல்லவில்லை. ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தினகரன் கட்சி அலுவலகம் செல்லப்போவதாக கூறியுள்ளதால் அன்றைய தினம் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கும் கைகலப்பு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகளை இணைக்க டிடிவி தினகரன் மட்டுமல்ல மத்தியில் ஆளும் பாஜகவும் நிர்பந்தப்படுத்தியது. ஆனால் தனக்கான மரியாதை கிடைத்தால் மட்டுமே இணையப் போவதாக கூறி வருகிறார் ஓபிஎஸ். இப்போது டிடிவி தினகரனும் கட்சி அலுவலகத்திற்குள் வந்து விட்டால் ஓபிஎஸ் தனது தர்மயுத்தத்தை மீண்டும் தொடர்வாரா அல்லது அடக்கி வாசிப்பாரா என்று அதிமுகவினர் கேட்கத் தொடங்கியுள்ளனர். எது எப்படியோ கட்சி சிதைந்து போய் விடாமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே உண்மை அதிமுக தொண்டர்களின் கோரிக்கையாகும்.