இடைக்கால முதல்வர்.... ஓபிஎஸ் தலைமையில் ஒற்றுமையாக செயல்பட அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு
ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் ஓபிஎஸ் தலைமையில் ஒற்றுமையாக செயல்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : முதல்வர் ஜெயலலிதா கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இலாக இல்லாத முதல்வராக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார் ஜெயலலிதா. அவரது இலாக்கள் ஓ. பன்னீர் செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் அப்போலோ மருத்துவமனையில் கூடி ஆலோசனை மேற்கொண்டனர். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து எம்.எல்.ஏக்களுக்கு மூத்த அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.
ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதால் இடைக்கால முதல்வர் ஒருவரை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இடைக்கால முதல்வர் யார் என்பதில் இருதரப்புக்கும் இடையே மல்லுக்கட்டு தொடர் கதையாகி வருகிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை ஓபிஎஸ் இடைக்கால முதல்வராக நீடிக்கட்டும் என்று கூறி வருகிறதாம்.
ஆனால் சசிகலா தரப்பு தங்களுக்கு வேண்டப்பட்டவரைத்தான் முதல்வராக்க வேண்டும் என்று மாலையில் இருந்து இன்று காலை வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்திருந்தார்களாம். இந்த சூழ்நிலையில் மத்திய அரசை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துள்ள சசிகலா தரப்பு முடிவு செய்துள்ளதாக தருகிறது.
இதன்காரணமாகவே ஓபிஎஸ் தலைமையில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ்ஐ மீண்டும் முதல்வராக்க கூடாது என்று சிலர் கூறினாலும் மத்திய அரசின் விருப்பம் அதுவாக இருப்பதால் இப்போதைக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட சசிகலா தரப்பு முடிவு செய்துள்ளதாம்.