நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றியும், அந்த நாலு நாட்களும்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றிக்கு 'அந்த நாலு நாட்கள்' மிக முக்கிய காரணம் என்று பூரிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்களும், அமைச்சர் பெருமக்களும். அந்த காலகட்டத்தில்தான் வெற்றியின் விதை ஊன்றப்பட்டதாக அரசியல் பார்வையாளர்களும் கூறுகிறார்கள்.
தனித்து போட்டி
தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் அனாயாசமாக வெற்றி பெற்று மோடி அலைக்கு நடுவேயும் தமிழகத்தை தனது பிடிக்குள் வைத்துக் கொண்டது. ஆனால் 35 தொகுதிகளில் போட்டியிட்ட மற்றொரு பிரதான கட்சியான திமுக அனைத்திலும் தோல்வியடைந்தது. தமிழகத்தின் பிற முக்கிய கட்சிகளான தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளுக்கும் இதே நிலைதான்.
எதிர்பார்க்கவில்லை
அதிமுக இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்று மாநில உளவுத்துறைகூட கணிக்கவில்லை. மத்திய உளவுத்துறையும், ஊடகங்களின் தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் இவ்வளவு பெரிய வெற்றியை அதிமுக பெறும் என்று கூறப்படவில்லை. ஊடக கருத்துக் கணிப்புகள், 20 முதல் 25 தொகுதிகள் அதிமுகவுக்கு கிடைக்கலாம் என்றுதான் கூறிவந்தன. நாட்டின் பிற பகுதிகளில் கருத்துக் கணிப்பு சரியாக வேலை செய்தபோதும் தமிழகத்தில் அல்வாதான் கிடைத்தது.
இங்கும் எதிர்பார்க்கவில்லை
அதிமுக பிரமாண்ட வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்றால், திமுக மோசமான தோல்வியையும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எப்படிப்பார்த்தாலும், 10 சீட்டுகளாவது பாக்கெட்டில் என்றுதான் திமுக தலைவர்கள் நம்பினர். ஊடக கருத்துக் கணிப்புகளும் அதே நம்பிக்கையை அளித்தன.
வரலாறு காணாத தோல்வி
திமுக 1949ம் ஆண்டு துவக்கப்பட்டது. 1967ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதன்முறையாக திமுக தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் போட்டியிட்ட 25 தொகுதிகளையும் கைப்பற்றியது. அப்போது முதல் இப்போதுவரை, திமுகவின் வரலாறு காணாத தோல்வி இதுதான். எமர்ஜென்சி காலத்தில் கூட திமுக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் அத்தனையும் போனதோடு, திமுக 23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
புதிய உச்சம்
தமிழக மண்ணின் மைந்தரான திமுக பெற்ற மொத்த வாக்குகள் எண்ணிக்கை 95 லட்சத்து 75 ஆயிரம். ஆனால் இப்போதுதான் காலூன்றி நடக்கப்படிக்கும் குழந்தையான பாஜக கூட்டணி பெற்ற வாக்குகள் 75 லட்சத்து 23 ஆயிரம். அதேநேரம், அதிமுக வாக்கு சதவீதம் விலைவாசியை போல கிடுகிடுவென ஏறியுள்ளது. 1977ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற 30.04 சதவீத வாக்குகள்தான் இதுவரையில் அக்கட்சியின் சாதனையாக இருந்தது. இந்த தேர்தலில் அது 44.34 சதவீதமாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடைசி கட்ட வேலை
அதிமுகவின் வெற்றிக்கு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் அயராத 'உழைப்பு' தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதிகப்படியான வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு அதிமுக நிர்வாகிகள் மிகவும் குறியாக இருந்தனர். வெற்றி பெறாவிட்டால், மாவட்ட செயலாளர்களுக்கு பதவி போய்விடும், அமைச்சர்களுக்கு கல்தாதான் என நெருக்கடி கொடுக்கப்பட்டதால் தேர்தல் களத்தில் துடிப்போடு வேலை பார்த்ததாக கூறுகிறார்கள்.
விட்டமின் ப...
தேர்தல் நிதிக்கு தலைமைக்கழகம் வாரி வழங்கியதாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு முந்தைய நான்கு நாட்களும் கண் அயராது 'களப்பணி' ஆற்றியுள்ளனர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள். அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் தேர்தல் நிதியை தங்களது சொந்தப் பணத்தில் இருந்து வாரி இறைத்துள்ளனர். ஆனால் பிற கட்சிகள் கடைசி நேர களமாடலை கோட்டைவிட்டன. இதுதான் யாரும் கணிக்க முடியாத வெற்றியை அதிமுகவுக்கு பெற வைத்தது. இந்த வெற்றிக்கு 144 தடை உத்தரவைப் போட்டு ஆளும் தரப்புக்கு பெரும் உதவி செய்த தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக எப்போதும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.