பிரிட்ஜோ சகோதரரின் கல்வி செலவை அதிமுக ஏற்கும்.. சசிகலா தரப்புக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்
பிரிட்ஜோ சகோதரரின் கல்வி செலவை அதிமுக ஏற்கும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம்: பிரிட்ஜோ சகேதரரின் கல்வி செலவை அதிமுகவே ஏற்கும் என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே உண்மையான அதிமுக நாங்கள்தான் எனக்கூறி தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ள ஓபிஎஸ் தரப்பின் இந்த அதிரடி அறிவிப்பால் சசிகலா தரப்பு நடுங்கிப் போயுள்ளது.
தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற 22 வயது மீனவர் அண்மையில் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மீனவர் படுகொலையை கண்டித்தும் இலங்கை கடற்படையின் அட்டுழியத்தை தடுக்கக்கோரியும் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து அப்பகுதி மீனவர்கள் இன்று 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை நாள்தோறும் பல்வேறு அரசியல் கட்சியினரும் சந்தித்து வருகின்றனர்.
நேரில் சந்தித்து ஆறுதல்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தங்கச்சி மடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் போராட்டம் நடத்தி வரும் மீனவர்களையும் அவர் நேரில் சந்தித்தார்.
மத்திய–மாநில அரசுகளின் கடமை
அப்போது அவர் பேசியதாவது, "நமது மீனவ சகோதரன் பிரிட்ஜோ இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட துயர சம்பவம் தமிழக மக்களின் மனதில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இனிமேல் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது மத்திய-மாநில அரசுகளின் கடமையாகும்.
அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்
இப்பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினையில் தனிகவனம் செலுத்தி எதிர்காலத்தில் மீனவர்களின் உயிரிழப்பு நடக்காமல் தடுக்க வலியுறுத்துவேன். பிரதமரை சந்திக்கும்போது மீனவர்களின் நியாயமான உணர்வுகளையும், கோரிக்கைகளையும் எடுத்துக்கூறி மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளும்
இந்த குடும்பத்தின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் பிரிட்ஜோவின் சகோதரரின் கல்விச்செலவை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளும்" இவ்வாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னுர்செல்வம் கூறினார்.
உண்மையான அதிமுக நாங்கள் தான்
ஏற்கனவே உண்மையான அதிமுக நாங்கள் தான். சசிகலா பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது செல்லாது என்றும் அவரருக்கு மற்றவர்களை நியமிக்க உரிமையில்லை என்று கூறியும் அவரது தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கிலியில் சசிகலா தரப்பு
இந்நிலையில் பிரிட்ஜோவின் கல்வி செலவை அதிமுகவே ஏற்கும் என ஓபிஎஸ் அறிவித்திருப்பது சசிகலா தரப்பை பீதியடைச் செய்துள்ளது. தங்கள் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் தான் கட்சி உள்ளது என்று எண்ணிவரும் சசிகலா குடும்பத்தினருக்கு அதிமுக தொடர்பான ஓபிஎஸின் நடவடிக்கைகள் கிலியை ஏற்படுத்தியுள்ளது.