தேர்தல் வருதுப்பா... இலவச மிக்சி கிரைண்டர், ஃபேன் விநியோகம் தீவிரம்
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விலையில்லா மிக்சி, கிரைண்டர்,மின்விசிறிகளை வழங்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 500 ஏழைகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவைகளை அமைச்சர் பா.வளர்மதியும், சென்னை மேயர் சைதை துரைசாமியும் வழங்கினார்.
இலவச மிக்சி, கிரைண்டர்
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 4 ஆண்டுகளாக இவை வழங்கப்பட்டு வருகின்றன. 1 கோடியே 82 லட்சம் பேருக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் இந்த அளவுக்கு தயாரித்து வழங்க முடியாது என்பதால் ஒவ்வொரு ஆண்டும் இதற்காக நிதி ஒதுக்கி வழங்கப்பட்டு வருகிறது.
ஆயிரம் விளக்கு தொகுதியில்
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பல்வேறு வார்டுகளில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று 109-வது வார்டு கில் நகர் விளையாட்டு திடலில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
500 ஏழைகளுக்கு
108, 109, 110 வார்டுகளில் உள்ள 500 ஏழை மக்களுக்கு ஒரே இடத்தில் இவைகள் வழங்கப்பட்டன. 109-வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஷ்பா நகர் ஆறுமுகம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பா.வளர்மதி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் வழங்கினார்கள்.
எல்லையில்லா மகிழ்ச்சி
மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வாங்கிச் சென்ற ஒவ்வொருவர் முகத்திலும் எல்லையில்லா மகிழ்ச்சியை காண முடிந்தது. சட்டசபை தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் விலையில்லா பொருட்களை வழங்க ஆளுங்கட்சியினர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.