"அம்மா பார்வை.. தொண்டனுக்குப் போர்வை".. ஒரு கோர்வையாத்தான் இருக்காங்க!
சென்னை: எதுகை மோனையில் எழுதுவது முன்பெல்லாம் புலவர்களாகத்தான் இருக்கும். கவிஞர்கள் எழுவார்கள். இப்போது அரசியல் கட்சியினர்தான் சும்மா அசத்தி வருகின்றனர்.
ஈடன் தோட்டத்து ரோஜாவே.. அட்டாக் ராஜாவே என்று ஆரம்பித்து விதம் விதமாக புல்லரிக்க வைக்கும் வாசகங்களை அப்படியே அள்ளி வீசி டிஜிட்டல் பேனர் வைப்பதில் தமிழகத்து அரசியல்வாதிகளுக்கு ஈடு இணை இந்த அகில உலகத்திலும் இல்லை.
சம்பந்தமே இல்லாமல் ஒபாமாவையும் கூட்டி வந்து வாழ்த்துச் சொல்வதில் வல்லவர்கள், சகலகலா வல்லவர்கள் இந்த அரசியல் சானக்கியர்கள்!
அந்த வகையில் நமது கண்ணில் பட்ட ஒரு அழைப்பு இது. முதல்வர் ஜெயலலிதாவின்ந் பிறந்த நாளையொட்டி ஆயிரம் விளக்குப் பகுதியில் நடந்த ஐயப்பன் கோவில் மலர் அபிஷேகம் குறித்த அழைப்பு இது.
அமைச்சர் பா. வளர்மதி கலந்து கொண்ட நிகழ்ச்சி இது. 22ம் தேதி நடந்தது. இதற்கான அழைப்பிதழில் "அம்மா பார்வையே என் போன்ற அடிமட்ட தொண்டனுக்குப் போர்வை" என்று போட்டுள்ளனர்.
பார்வை ஓகே.. அது என்னப்பா போர்வை... ரொம்பப் புல்லரிக்குதே.. ஓஹோ.. எதுகை மோனையா...!
இவர்தான் அந்த அனில்குமார்!
இப்படிப் போஸ்டர் போட்டு கலகலப்பூட்டியுள்ள நபரின் பெயர் பி.கே. அனில்குமார். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர். சென்னையில் வசித்து வருபவர். 1988ம் ஆண்டு முதல் அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறாராம்.
ஆயிரம் விளக்குப் பகுதி அம்மா பேரவை பொருளாளாரக இருக்கிறார். 2000ம் ஆண்டு முதல் அதிமுகவில் சீட் கேட்டு வருகிறாராம். ஒருமுறை கூட கிடைக்கவில்லை. இருந்தாலும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கேட்டு வருகிறாராம்.
இப்போது ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கேரள மாநிலம் சோற்றானிக்கரை பகவதி அம்மன் கோவில், முல்லைபரம்பத்துக் காவு அம்மந் கோவில் (இதுதான் அனில்குமாரின் குல தெய்வக் கோவிலாம்), ஆலியார் ஆஞ்சநேயர் கோவில், கடம்பழா பகவதி அம்மந் கோவில் என நான்கு கோவில்களில் அதன் பிரசாதத்தை நேரடியாக முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கே அனுப்ப ஏற்பாடு செய்துள்ளாராம்.
பார்க்கலாம்.. பிரசாதம் வேலை பார்க்கிறதா.. அனில்குமாருக்கு டிக்கெட் கிடைக்கிறதா என்று!
என்ட அம்மே!