காவிரி விவகாரம்: ஏப்.25 முதல் 29 வரை டெல்டா மாவட்டங்களில் அதிமுக பொதுக்கூட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது.
சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பொது கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு தமிழகத்தில் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அரசியல் அமைப்புகள், விவசாய அமைப்புகள் என தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படுகிறது. மே 3 ஆம் தேதி வரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
நாடாளுமன்றத்தை அதிமுகவினர் முடக்கியதோடு போராட்டம் நடத்தினர், அப்போது பேசிய தம்பித்துரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராடுவோம் என்று கூறினார்.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகத்தில் எதிர்கட்சியினர் போராடி வருகின்றனர். முழுஅடைப்பு, ஆர்பாட்டம் நடத்தி வந்த திமுக, தோழமை கட்சியினர், வரும் 23ஆம் தேதி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் அதிமுக சார்பில் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பொது கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை:
ஏப்ரல் 25ஆம் தேதி நாகை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஏப்ரல் 26ஆம் தேதி தஞ்சாவூர், 27ஆம் தேதி திருச்சி, மற்றும் 28ஆம் தேதி திருவாரூர், கரூரில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
ஏப்ரல் 29ஆம் தேதி கடலூர், புதுக்கோட்டை, மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நாகையில் ஓ.பன்னீர்செல்வம், ஓ.மணியன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் அரியலூர், பெரம்பலூரில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், ராஜேந்திரன், ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என்றும், தஞ்சையில் ஆர்.வைத்திலிங்கம், தங்கமணி, துரைக்கண்ணு தலைமையில் 26ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசை வெளிப்படையாக எதிர்க்க தயாராகிவிட்டது அதிமுக.