சட்டசபைத் தேர்தலில் தோற்ற வைத்திலிங்கம் உள்ளிட்ட 4 பேருக்கு அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி சீட்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 15 மாநிலங்களில் இருந்து வரும் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலாவதியாக உள்ளது.
மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான இந்த தேர்தலில் தமிழகத்திலும் ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் பதவி வரும் ஜுன் 29ல் காலியாக உள்ளன. ஜூன் 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
அதிமுக சார்பில் தற்போதைய மாநிலங்களவை கட்சித் தலைவரான நவநீதி கிருஷ்ணன், ரபி பெர்ணார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன், காங்கிரஸில் சுதர்சன நாச்சியப்பன், திமுகவில் கே.பி.ராமலிங்கம் மற்றும் எஸ்.தங்கவேலு ஆகியோர்தான் பதவி காலம் முடிவடைய போகும் தமிழக எம்.பிக்களாகும்.
இந்த பதவி இடங்களுக்கு, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக சட்டசபை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். ஒரு ராஜ்யசபா எம்பிக்கு, 34 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு தேவை. அந்த வகையில் 134 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள அதிமுகவுக்கு 3 ராஜ்யசபா எம்பிக்கள் பதவி நிச்சயம் கிடைக்கும். 98 எம்.எல்.ஏ.க்களை பெற்றுள்ள திமுகவுக்கு 2 பதவிகள் நிச்சயம்.
ஒருவேளை, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக ஜெயித்தால் 4 உறுப்பினர்களை அக்கட்சியால் தேர்ந்தெடுக்க முடியும்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக தனது 2 வேட்பாளர்கள் பெயரை அறிவித்தது. அதன்படி, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரான டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அமைப்பு செயலாளர், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்தார் திமுக தலைவர் கருணாநிதி.
இந்நிலையில், இன்று அதிமுகவும் நான்கு வேட்பாளர்கள் பெயரை அறிவித்துள்ளது. அதில் அதிமுக சார்பில் ஆர். வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவிக்காலம் முடிவடையும் நவநீதகிருஷ்ணனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரசில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த மூத்த தலைவர்.
இதேபோல் ஆர்.வைத்திலிங்கம் சட்டசபைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் ஐவர் அணி அமைச்சர்களில் ஒருவராக வலம் வந்தவரான ஆர். வைத்திலிங்கம், ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரனிடம் 3642 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அவர் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், மே, 24ல் துவங்கி, 31ல் முடிவடைகிறது. இத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், வேட்பு மனுக்களை, பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன் தலைமைச் செயலகத்தில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தவிர, பிற நாட்களில் காலை 11:00 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.