அதிமுக என்றால் இனி நாங்கள் தான்...மைத்ரேயன் வெற்றி கொக்கரிப்பு!
அதிமுக என்றால் இனி நாங்கள் தான், இனி அணி எல்லாம் கிடையாது என்று அதிமுக ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக என்றால் இனி நாங்கள் தான், இனி அணி எல்லாம் கிடையாது என்று அதிமுக ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தங்கள் அணிக்கு வேறு பெயரைத் தேடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுகவின் ராஜ்யசபா எம்பி மைத்ரேயன் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பது குறித்து கூறுகையில்: ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுக மிகப்பெரிய பிளவைக் கண்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் சசிகலா ஒரு அணியாகவும் செயல்பட்டது. இதற்கிடையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்த போது இரு அணிகளும் உரிமை கோரியதால் தற்காலிகமாக இரட்டைஇலை சின்னம் முடக்கப்பட்டது.
அதற்குப் பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு முதல்வர் பழனிசாமி தலைமையில் பெரும்பாலான எம்பிகளும், எம்எல்ஏக்களும் விலகி வந்து தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றார்கள். அதன் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தனை.
மேலும் தேர்தல் ஆணைய வழக்கில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்துடன், எடப்பாடி பழனிசாமியும் ஒரு மனுதாரராக இணைந்தார். இன்று தேர்தல் ஆணையம் அளித்திருக்கும் தீர்ப்பு, ஓ.பிஸ், ஈபிஎஸ் போன்ற மிகப்பெரும் தலைவர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி.
அவர்களுக்கு மட்டுமின்றி, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி இது. இந்திய அரசியல் வரலாற்றில் பல கட்சிகள் உடைந்திருக்கின்றன, ஆனால் எந்த கட்சியும் மீண்டும் இணைந்து சின்னத்தை பெற்றதில்லை. அதிமுக தான் இரண்டு முறையும் பிளவு கண்டு பின்னர் சேர்ந்து சின்னத்தை வென்றுள்ளது.
ஜனநாயகத்தில் பாதிக்கப்பட்ட யாருமே நீதிமன்றத்தை நாட உரிமை உள்ளது. ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் நிதிஷ்குமாருக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து சரத்யாதவ் எம்பி தொடர்ந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே எந்த நீதிமன்றத்தை அணுகினாலும் தினகரனுக்கு அதே தீர்ப்பு தான் கிடைக்கும் ஏனெனில் அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் இரண்டு கட்சியின் நிலைமையும் ஒன்று தான்.
அதிமுக என்றால் இனி அணி கிடையாது, அதிமுக என்றால் இனி நாங்கள் மட்டும் தான். தினகரன் வேறு பெயரை தங்களது அணிக்கு தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று மைத்ரேயன் கூறியுள்ளார்.