5வது நாளாக இன்றும் தொடர்கிறது... அதிமுக நேர்காணல்!
சென்னை: அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா 5வது நாளாக இன்றும் நேர்காணல் நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கென ஒவ்வொரு கட்சியிலும், அக்கட்சி சார்பாக போட்டியிட தொண்டர்கள் விருப்பமனு தாக்கல் செய்தனர்.
ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளுமே விருப்பமனுத் தாக்கல் நடத்தி முடித்து விட்டது. இந்நிலையில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பி விருப்பமனுத் தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடந்து வருகிறது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் வேட்பாளர்களைச் சந்தித்து வருகிறார் ஜெயலலிதா. கடந்த 6, 21, 22 ஆகிய 3 தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பாளர் தேர்வு நடைபெற்றது.
நேற்று முன்தினம் திடீரென வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் திடீரென ரத்து செய்யப்பட்டது. பின்னர் வியாழக்கிழமை வேலூர், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.
இந்நிலையில், 5-வது நாளாக தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், நாகை, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளுக்கு இன்று நேர்காணல் நடத்தி வருகிறார் ஜெயலலிதா. இந்த நேர்காணலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.