ஜெ.வுக்காக 100 பேர் இறந்ததில் உண்மை என்ன?: இது திமுக பிரமுகரின் 'திடுக்' தகவல்
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து 100 பேர் வரை அவருக்காக உயிரிழந்துவிட்டதாக அதிமுகவினர் பிரசாரம் செய்து வருவது மோசடியானது என்று ஆதாரங்களுடன் திமுக தொண்டர் அணி மாநிலச் செயலாளர் பொள்ளாச்சி மா. உமாபதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"பணத்தைக் காட்டி பிணங்களை விலை பேசும் வில்லாதி வில்லன்கள்" என்ற தலைப்பில் பொள்ளாச்சி மா. உமாபதி தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஜெயலலிதா "குற்றவாளி" என்று தீர்ப்பு கூறியபின் பலர் உயிர் தியாகம் செய்ததாக அதிமுக பேச்சாளர் ஆவடிகுமார் அடிக்கடி கூறிவந்தார். அதுவும் எண்ணிக்கை 100ஐக் கடந்தது. "நமது எம்ஜி ஆர்" பத்திரிக்கையில் அவ்ர்களின் ஊர் பெயர் எல்லாம் வெளியானது. நான் சம்மந்தப்பட்ட ஊர்களில் உள்ள கழகத்தோழர்களை, நண்பர்களை தொடர்புகொண்டு. "இன்ன பெயர்கொண்டவர், இன்ன காரணத்தினால்" இறந்தாரா? என்று விசாரித்தபோது , பெரும்பாலானவர்கள் இறப்புக்கும் ஜெயலலிதா ஜெயிலுக்கு போனதுக்கும் சம்மந்தமே இல்லை என்று தெரியவந்தது.
அன்றைய தினத்தில் இறந்தவர்களையெல்லாம் ஜெயாவுக்காக வருந்தி இறந்ததாக போலிக்கணக்கு காட்டுகின்றனர். ஒருசிலர், " என்னமோ ஜெயாவுக்காக இறந்ததாக சொன்னால் 5லட்சம் வரை தருவதாக சொல்லி இருக்கிறார்கள். வருகிற பணத்தை ஏன் வேண்டாம் என்பது? போனவர் போய்விட்டார். ஏதோ வருவது லாபம், அதே சமயம் இதை வெளியிட்டு எங்களுக்கு கிடைக்க இருக்கிற பணத்தை இல்லாமல் செய்து விடாதீர்கள்" என்றும் கூறினார்கள்.
எனவே மாதிரிக்கு ஓரிரு தகவல்களை சொல்கிறேன். ஆனால் சந்திக்கு வந்தால் எல்லாவற்றையும் நிரூபிக்கவும் முடியும்.
மாதிரி 1: ஒருவர் நெடுங்காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்து, 27ஆம் தேதி காலை 7.30 மணிக்கு இறந்து விட்டார். அவர் சாகின்ற நேரத்தில் ஜெயலலிதா போயஸ் தோட்டத்தை விட்டு புறப்படக்கூட இல்லை. அவர் ஜெயலலிதாவை தண்டித்ததற்காக இறந்ததாக பட்டியலில் சேர்த்துள்ளனர்.
மாதிரி 2: ஒருவர் நீண்ட காலமாக உடல் நலமின்றி இருந்து அவரும் காலை 8 மணி அளவில் இறந்து போகிறார். அவரது மகன் அதிமுக வக்கீல். அவரும் பட்டியலில் இருக்கிறார்.
மாதிரி 3: ஒருவர் அதிமுகவே அல்ல. அவர் தீர்ப்பு வந்த நேரத்தில் "இந்த தீர்ப்பு சரியானதுதான்" என்று கருத்து தெரிவித்திருக்கிறார். அவரை அருகில் இருந்த அதிமுகவினர் கடுமையாக தாக்கி விடுகின்றனர். அவர் பின்னர் இறந்து போகிறார். அவரையும் அந்த பட்டியலில் இணைத்துள்ள கொடுமை நடந்துள்ளது.
இது போன்ற பல சாட்சியங்கள் உள்ளன. உரிய நேரத்தில் வெளியாகும்.ஏன் ஊர் பெயரையும், இறந்தவர் பெயரையும் குறிப்பிடவில்லை என்றால் , அதை தெரியப்படுத்தினால் அதிமுகவினர் தருவதாகச் சொன்ன தொகை அவர்களுக்கு கிடைக்காமல் போகும் என்பதால் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் அனைவரும் ஏழைகள் என்பதால் அவர்களுக்கு இழப்பு ஏற்படுத்த விரும்பவில்லை.
இவ்வாறு திமுக தொண்டர் அணி மாநிலச் செயலாளர் பொள்ளாச்சி மா. உமாபதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.