வருடக் கடைசியிலும் மக்களை வதைத்து சிதைத்த அதிமுக!
சென்னை: சென்னையின் பல பகுதி மக்கள் நேற்று பெரும் கொதிப்புக்குள்ளாகிப் போனார்கள். காரணம்.. அதிமுக. பொதுக்குழு என்ற பெயரில் இவர்கள் அடித்த கூத்தால் நேற்று தென் சென்னையின் பல பகுதி மக்கள் பெரும் துயரத்துக்குள்ளாகிப் போனார்கள்.
திருவான்மியூர் பகுதி மக்கள் கடந்த 3 நாட்களாக இந்த துயரத்தை அனுபவிக்க நேரிட்டது. ரோடே தெரியாத வகையில் பேனர்களை வைத்து அக்கப் போர் செய்து விட்டனர் அதிமுக தொண்டரடிப் பொடிகள்.
சாலைகளில் நடந்து கூட போக முடியவில்லை. பிளாட்பாரத்தில் நடக்க முடியவில்லை. சாலையில் நடக்கலாம் என்றால் வாகனங்களுக்கிடையே சிக்காமல் தப்பி நடந்து செல்ல வேண்டிய கொடுமை.
3 நாள் அக்கப்போர்
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் என்னவோ நேற்று ஒரு நாள், அதுவும் சில மணி நேரம் மட்டுமே நடந்தது. ஆனால் 3 நாட்களாக திருவான்மியூர் பகுதி மக்கள் படாதபாடு பட்டு விட்டனர்.
புது ரோடு.. ரோடு பூராம் ஜெ. போர்டு
இந்த பொதுக்குழுவுக்காக சிறப்பாக அதிரடியாக படு வேகமாக புது ரோடு போட்டனர். அந்த ரோட்டின் ஓரங்களில் ஜெயலலிதாவின் படம் தாங்கிய பிரமாண்ட பேனர்களை நிறுத்தி வைத்தனர்.
போயஸ் தோட்டத்திலிருந்து
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் இருந்து பொதுக்குழு-செயற்குழு கூட்டம் நடைபெற்ற திருவான்மியூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி-ஆராய்ச்சி நிறுவனம் வளாகம் வரை வழிநெடுகிலும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
மக்களைப் பற்றி கவலையே இல்லை
பல இடங்களி் பேனர்கள் காற்றுக்கு கீழே விழுந்து சாலையில் சென்றவர்கள் மீது சாய்ந்தது. மக்களே கஷ்டப்பட்டு அதை எடுத்துவைத்து விட்டுச் செல்ல நேரிட்டது. அது கிழிந்து விடாமல் பார்ததுக் கொள்ள பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பதுதான் கேவலத்திலும் படு கேவலம்.
செண்டை...
ஏதோ இமயத்தை வென்று திரும்பிய மன்னருக்கு வரவேற்பு அளிப்பதைப் போல, செண்டை மேளம், கலைநிகழ்ச்சிகள் என வழிநெடுகிலும் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்கள்தான் செத்துப் போனார்கள் பாவம்.
ஒன்றரை மணி நேர அக்கப்போர்
பொதுக்குழு-செயற்குழு கூட்ட அரங்கிற்கு காலை 10.45 மணிக்கு ஜெயலலிதா வந்தார். கூட்டம் முடிந்து மதியம் 12.15 மணிக்கு அவர் திரும்பினார். இதற்குத்தான் இவ்வளவு கஷ்டம்.
கர்ப்பிணிகள் - முதியவர்கள் தவிப்பு
திருவானமியூரைச் சுற்றிலும் உள்ள பல சாலைகளில் போக்குவரத்து நெற்று இந்த சமயத்தில் முற்றிலும் பாதிக்கப்பட்டடது. அவசர வேலைக்காக வெளியில் வந்தவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். ஆம்புலன்ஸ் கூட அவசரமாக போக முடியாத நிலை ஏற்பட்டது.
இதுக்குக கமிஷனர் தலைமையில் பாதுகாப்பு!
இந்த லட்சணத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக்கண்ணன் தலைமையில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் என்ன சீர் செய்தார்களோ தெரியாது.. மக்கள் பட்ட பாடு அவர்களுக்குத்தான் தெரியும்.
கடைசிக் கூட்டம்... அதான் ஆர்ப்பாட்டம்
அதிமுக ஆட்சி முடியப் போகிறது.. இதுதான் அதிமுகவின் கடைசி பொதுக்குழுக் கூட்டம். இதனால்தான் இப்படி தடபுடலாக நடத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் அதிமுகவினர் என்று கூறப்படுகிறது.