அதிமுகவின் பொருளாளர் பதவி... ஓபிஎஸ்ஐயும் விடாது துரத்திய சென்டிமெண்ட்
அதிமுகவில் பொருளாளர் பதவி வகிப்பவர்களின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிப் போகும் என்ற சென்டிமெண்ட் ஓ.பன்னீர் செல்வத்தை விடாது துரத்தி வருகிறது.
சென்னை: கட்சியில் பொருளாளர் பதவி கிடைப்பது என்பது சாதாரண விசயமில்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்ததுதான் பொருளாளர் பதவி. திமுகவில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர், கணக்கு கேட்ட சர்ச்சையினால்தான் அங்கிருந்து நீக்கப்பட்டு அஇஅதிமுகவை உருவாக்க காரணமாக அமைந்தது. தமிழக முதல்வராகவும் ஆனார் என்பது வரலாறு.
திமுகவில் பொருளாளர் பதவியில் இருந்த கருணாநிதி, அந்த கட்சியின் தலைவரானார். பின்னர் முதல்வரானார். அதே சென்டிமென்டில் தனது மகன் ஸ்டாலினுக்கும் திமுக பொருளாளர் பதவி வழங்கி தமிழகம் முழுவதும் வலம்வர வைத்துள்ளார். அப்படிப்பட்ட முக்கிய பதவியாக விளங்கும் பொருளாளர் பதவி, அதிமுகவில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமில்லாத பதவியாக மாறிவிட்டது என்பதுதான் உண்மை.
எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோது அதிமுக பொருளாளர் பதவி தலித்துக்கு என்ற அடிப்படையில் சவுந்திரபாண்டி, துரைராஜ் போன்றோருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அவரே அந்த முறையை மாற்றி பண்ருட்டி ராமச்சந்திரனை கொண்டு வந்தார். பிறகு அமைச்சராக இருப்பவருக்கு அந்த பதவி கிடையாது என திருப்பத்தூர் மாதவனை கொண்டு வந்தார்.
எம்.ஜி.ஆர் பார்முலா
ஜெயலலிதா பொதுச் செயலாளரானதும் எம்ஜிஆர் பார்முலாவை தூக்கி எறிந்தார். கட்சியின் அவசர பொதுக்குழுவை கூட்டி பொருளாளர் பதவியை நியமன முறையில் மாற்றம் செய்தார். அதன்படி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். இன்று அட்ரஸ் இல்லாமல் இருக்கிறார். அடுத்து திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இவரை சுத்தமாக ஓரம் கட்டி டிடிவி தினகரன் பொருளாளர் ஆனார்.
டிடிவி தினகரன்
ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர் டிடிவி தினகரன். மாநிலங்களவை உறுப்பினர், அதிமுகவின் அதிகாரமிக்க பதவியான பொருளாளர் பதவிகளை அலங்கரித்தவர். பின்னர் அதிகாரம் இல்லாமல் இருந்தார் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு வெளியே வரத்தொடங்கியுள்ளார்.
ஓபிஎஸ் அறிமுகம்
போயஸ்கார்டனில் டிடிவி தினகரன் அதிகார மையமாக இருந்தபோதுதான் கட்சியின் பொருளாளராக உள்ள ஓபிஎஸ்ஸை தினகரன் அடையாளம் காட்டினார். டிடிவி தினகரன் பெரியகுளத்தில் தங்கியிருந்தபோது, ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி வீட்டில் குடியிருந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கம்தான், ஒ.பி.எஸ்ஸை முதல்வர் நாற்காலி வரை கொண்டு சென்றது. ஆனால் பொருளாளர் ராசி இவரையும் விடவில்லை. இப்போது சசிகலாவிற்கு எதிராக பேட்டி அளித்தார் என்பதற்காக பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுக உதயமாகி முதன்முதலில் அக்கட்சி 1973, திண்டுக்கலில் லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது அதிமுகவின் வெற்றிக்கு உழைத்தவர்களில் திண்டுக்கல் சீனிவாசனும் ஒருவர். அப்போது சீனிவாசன் திண்டுக்கல் மாவட்ட துணைச்செயலாளராக இருந்தார். அந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற மாயத்தேவர், எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் தி.மு.க.விற்கு மாறியபோது, அதிமுகவிற்கு விசுவாசமிக்கவராக இருந்தவர்களில் திண்டுக்கல் சீனிவாசனும் ஒருவர்.
இழந்த பதவி கிடைத்தது
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, சீனிவாசன் மாவட்டச் செயலாளராக்கப்பட்டார். கடந்த 2000 முதல் 2006ம் ஆண்டு வரை அ.தி.மு.க. பொருளாளராக, ஜெயலலிதாவுக்கு மிக நம்பிக்கைக்குரியவர்கள் பட்டியலில் இருந்தார். பின்னர் ஓரங்கப்பட்டார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானர். ஓ.பன்னீர் செல்வம் பொருளாளர் பதவியில் இருந்து நிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார் திண்டுக்கல் சீனிவாசன்.