அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம்!
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை : அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதே போன்று கரூர் மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டவர்கள் அனைவருமே டிடிவி. தினகரனின் ஆதரவாளர்கள்.
டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் ஒவ்வொருவரையும் மாவட்ட வாரியாக களையெடுக்கும் வேலையை அதிமுக செய்து வருகிறது. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட நாஞ்சில்சம்பத், சி.ஆர். சரஸ்வதி, புகழேந்தி உள்ளிட்டோர் ஆர்கே நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
இதே போன்று முன்னாள் அமைச்சர் செந்தமிழன், பரிதி இளம்வழுதி உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கட்சியை விட்டு நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர்.
டிடிவி. தினகரனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வரும் செந்தில்பாலாஜி, கரூரில் டிடிவி தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்துவதற்கு முனைப்போடு செயல்பட்டு வந்தார். அதே மாவட்டத்தை சேர்ந்த தற்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், செந்தில்பாலாஜிக்கும் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று டிடிவி. தினகரனின் ஆதரவாளர்களான கரூர் மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டுள்ளவர்களுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர்களுடன் அதிமுகவினர் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் தலைமைக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.