ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன?
அதிமுகவை கால்நூற்றாண்டுகாலமாக குத்தகைக்கு எடுத்தவர்களாக ஆட்டம் போட்ட சசிகலா கோஷ்டிக்கு குட் பை சொல்லப்பட்டுவிட்டது.
சென்னை: கவியரசர் கண்ணதாசனின் ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன? என்ற பாடல் வரிகள் அப்படியே சசிகலா கோஷ்டிக்குத்தான் கனகச்சிதமாக பொருந்துகிறது.
எம்ஜிஆர் எனும் மக்களால் நேசிக்கப்பட்ட தலைவரால் உருவாக்கப்பட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். நாவலர் நெடுஞ்செழியன், ஆர்.எம். வீரப்பன், எஸ்.டி. சோமசுந்தரம், ராகவானந்தம், ஹண்டே என பழுத்த அரசியல்வாதிகள் பலரும் நிறைந்து இருந்த இயக்கம்..
இளைய தலைமுறை அரசியல்வாதிகளையும் அரவணைத்துக் கொண்டு போன மாபெரும் இயக்கம்... ஒருகட்டத்தில் ஜெயலலிதாவும் அதிமுகவின் ஒரு அங்கமாகவும் இருந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவுபட்டது. ஆனால் ஜானகி எம்ஜிஆரின் விட்டுக் கொடுப்பால் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் புத்துயிர் பெற்றது.
2-ம் கட்ட தலைவர்கள் இல்லை
ஜெயலலிதா அதிமுகவில் பட்ட அவமானங்கள்... எதிர்கொண்ட ஏளனங்கள் ஏராளம்... ஆனால் ஜெயலலிதாவே அதிமுக தலைமை ஏற்றபோது 2-வது கட்ட தலைவர்கள் யாருக்குமே இடமில்லாமல் போனது. இதற்கு காரணமே சசிகலாவும் அவரது குடும்பத்தினரும்தான்.
வெறித்தனமான கொள்ளை
1991-ம் ஆண்டு முதல்வர் நாற்காலியில் ஜெயலலிதா அமர்ந்ததுதான் தாமதம்... சசிகலா குடும்பத்தினர் அரசாங்க சொத்துகளை வெறிகொண்டு சூறையாடத் தொடங்கினர்.. இந்த வெறித்தனமான கொள்ளையாட்டம்தான் ஜெயலலிதாவை மட்டுமல்ல அதிமுகவையும் சீரழித்துவிட்டது.
ரத்த கண்ணீர்தான்
அடேங்கப்பா... நினைத்துப் பார்க்க நமக்கே மலைப்பாக இருந்தால்... ஜெயலலிதா காலத்திலேயே ஒட்டுமொத்த அதிமுகவையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு சசிகலா கோஷ்டி போட்ட ஆட்டங்களை நினைத்தால் நிச்சயம் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் ரத்த கண்ணீர் வடித்துதான் இருப்பார்கள்... அதுவும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா போட்ட பேயாட்டத்தை தமிழகம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
கூவத்தூர் கூத்துகள்
சசிகலாவையே பொதுச்செயலராக்க 25 நாட்கள் நாடகம்.... ஜெயலலிதாவை போல வேசம் போட்டுக் கொண்டு டூப்ளிகேட்டாக வலம் வந்தது.. எதைத்தான் தமிழகம் மறக்கும்? இதன் உச்சமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரப் போகிறது என்று தெரிந்தும் முதல்வர் நாற்காலியில் ஒருமுறையேனும் உட்கார்ந்துவிட கூவத்தூரில் அடித்த கூத்துகளை நாடும் நாட்டு மக்களும் மறக்கத்தான் முடியுமா?
மறக்க முடியாத சபதம்
ஓபிஎஸ் தியானம் என்ற பெயரில் கலகக் குரல் எழுப்ப நள்ளிரவில் போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் 'ஒரிஜனல்' முகத்தைக் காட்டிய சசிகலாவின் குரூரம் இன்னும் கண்களைவிட்டு அகலவில்லை.. அதுவும் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கப் போகிற போது, நியாயவானைப் போல ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போய் சத்தியமெல்லாம் செய்து எம்ஜிஆர் இல்லத்தில் போய் தியானமெல்லாம் இருந்து...அடேங்கப்பா எத்தனை கூத்துகள்!
தினகரன் ஆட்டம்
சசிகலா சிறைக்குப் போனபின்னர் தினகரன் ஆடிய ஆட்டம்... போட்ட வேடம்தான் எத்தனை எத்தனை! ஆர்கே நகரில் இவரே வேட்பாளராம்.. .ஆனால் முதல்வராகமாட்டாராம்... கொள்ளையடித்த பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என எத்தனை எத்தனை நூதன முறைகளில் பணப்பட்டுவாடா... ஆர்கே நகரே அல்லோகலப்பட்ட அந்த 15 நாட்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வரலாற்று கல்வெட்டுகளில் எழுதி வைத்து வருங்கால தலைமுறையினர் படித்து தெரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்!
சரித்திரம்....
காலம் எப்படியெல்லாம் மாறுகிறது மக்களே.... கால்நூற்றாண்டுகாலமாக தமிழகத்தை சூறையாடிய மாஃபியா கும்பலின் ஆட்சி அதிகார கனவுகள் அனைத்தும் தகர்ந்து போனது! நேற்று கொடி பிடித்து கூழை கும்பிடு போட்டவர்கள் இன்று போர்க்கொடி தூக்கி தரித்திரங்களை விரட்டியடித்து சரித்திரம் படைத்துவிட்டனர்!
நாணய சிகாமணிகள் அல்ல
இன்று போர்க்கொடி தூக்கியவர்கள் எல்லாம் நாணய சிகாமணிகள் என உச்சிமோந்து பாராட்ட முடியாது...இவர்கள் எல்லாம் மாஃபியா கும்பலின் காலடி மண்ணைத் தொட்டு வணங்கிய குறுநில கும்பல்கள்தான்.. ஆனாலும் ஏதோ ஏதோ நிர்பந்தங்களின் பெயரிலாவது இன்று சசிகலா கும்பலை அரசியலின் பக்கங்களில் இருந்து துடைத்து தூக்கி எறிந்து குப்பை தொட்டியில் வீசியதற்காக நிச்சயம் பாராட்டுவோம்!
ஆம் கண்ணதாசனின் இந்த வரிகள் இந்த சசிகலா கும்பலுக்கு சாலவே பொருந்தும்..
ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன? திரண்டதோர் சுற்றம் என்ன?