அதிமுக தலைவர்கள் "சின்னம்மா"வின் காலில் விழுந்து கெஞ்சிய "திருநாள்" இன்று!- Flashback
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாதான் பதவியேற்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் கெஞ்சி கூத்தாடிய நாள் இன்று.
சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாதான் பதவியேற்க வேண்டும் என்று போயஸ் தோட்டத்திற்கு சென்ற அதிமுக நிர்வாகிகள் கடந்த ஆண்டு இதே நாளில் அவரிடம் கெஞ்சி கூத்தாடிய திருநாள் இன்று ஆகும்.
ஜெயலலிதா இருந்தபோது அவருடன் 33 ஆண்டுகளாக நிழலாக அவருடன் இருந்தவர் சசிகலா. வேட்பாளர்கள் நியமனம், டெண்டர் ஒப்பந்தம், நிர்வாகிகள் நியமனம் என அனைத்து வகையிலும் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தலையிட்டு ஜெயலலிதாவுக்கு ஆலோசனை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நிலை பாதிப்பு காரணமாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாள்கள் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.
ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்பு
இதையடுத்து டிசம்பர் 5-ஆம் தேதி இரவு அவசர அவசரமாக ஓபிஎஸ் மற்றும் அமைச்சரவை சகாக்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். அங்கு முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். இவற்றை தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் செய்து வைத்தார்.
கட்சியை வழி நடத்துவது யார்?
ஆட்சியை வழிநடத்த ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுவிட்டார். ஆனால் கட்சியை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து மூத்த நிர்வாகிகள்
ஒன்று கூடி ஆலோசனை செய்து நேராக போயஸ் தோட்டத்துக்கு சென்றனர். அங்கு சோகமே உருவாய் இருந்த சசிகலாவை சந்தித்து நீங்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று ஒருமித்த குரலில் கூறினர்.
இனி பதவி எதுக்கு
அதற்கு சசிகலாவோ துக்கத்தை தொண்டையில் அடைத்துக் கொண்டு அக்காவே போய்விட்டார்கள். இனி எனக்கு பதவி எல்லாம் எதுக்கு என்று கேட்டுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் மதுசூதனன், பொன்னையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சசிகலாவிடம் கெஞ்சி கூத்தாடினர். அப்படியும் சசிகலா மனம் இறங்காததால் அவரது காலில் விழுந்து கெஞ்சினர்.
அரைமனதாக சம்மதம் தெரிவித்த சசிகலா
மூத்த நிர்வாகிகள் மிகவும் கெஞ்சி கேட்டுக் கொண்டதால் அரைமனதாகவே கட்சி பொறுப்பை ஏற்க சசிகலா சம்மதித்தார். இந்த சம்பவங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி ஆகும். அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் கூறிய அதே நிர்வாகிகள் அப்பொறுப்பிறகு சசிகலாவை மன்றாடி அழைத்து இன்றோடு ஓராண்டு முடிவடைய போகிறது.