அதிமுகவுக்கு உரிமை கோரும் திவாகரன் பேச்சு- மூத்த தலைவர்கள் பயங்கர ஷாக்!
அதிமுகவுக்கு உரிமை கோரும் வகையில் திவாகரன் பேசியிருப்பது அக்கட்சி மூத்த தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை: அதிமுகவின் தொடக்க காலம் முதலே கட்சியை பாதுகாத்ததில் தங்களுக்கு அதிக பங்கு உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலராகிவிட்ட சசிகலாவின் சகோதரர் திவாகன் பேசியிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் சசிகலாவின் கணவர் நடராசன் நடத்திய பொங்கல் விழாவில் திவாகரன் பங்கேற்றார். அப்போது, அதிமுகவின் தொடக்க காலம் முதலே கட்சியை பாதுகாத்ததில் தங்களுக்கு அதிக பங்கு இருக்கிறது; நாங்கள் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல என கூறியிருந்தார்.
அத்துடன் மத்திய அரசையும் மிக கடுமையாக விமர்சித்து, அதிமுக, திராவிடர் கட்சி; ஆரியர் கட்சி அல்ல என விமர்சித்திருந்தார். அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா ஆகிவிட்ட காரணத்தாலே மன்னார்குடி குடும்பத்துக்குதான் அதிமுக சொந்தம் என்பது போல திவாகரன் பேசியிருப்பது அக்கட்சியில் உள்ள எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர்தான் ஜெயலலிதாவின் பின்னால் பதுங்கிக் கொண்டு இருந்தது மன்னார்குடி கோஷ்டி. ஆனால் இப்போது அதிமுகவின் தொடக்க காலம் முதலே இக்கட்சியை பாதுகாத்தது நாங்கள் என பகிரங்கமாக பேசியிருக்கிறார். இது இனி அதிமுக மன்னார்குடி குடும்ப கட்சியாக இருக்கும் என்பதையே திவாகரனின் பேச்சு காட்டுவதாக அந்த தலைவர்கள் கருதுகின்றனர்.