சசிகலா, தினகரனை யாராலும் கட்சியை விட்டு நீக்க முடியாது - சொல்வது அதிமுக பேச்சாளர் ஆவடி குமார்
அதிமுகவைவிட்டு சசிகலாவை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்கு மட்டுமே உள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் ஆவடி குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனையும், சசிகலாவையும் நீக்க முடியாது என்றும், தற்போது வரை அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக தினகரனும் நீடிப்பதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் ஆவடி குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற இபிஎஸ் அணியும், ஓ.பிஎஸ் அணியும் இணைந்து செயல்படும் என்றும் அதற்காக இரண்டு அணி சார்பிலும் பேச்சுவார்த்தை குழுக்களும் அமைக்கப்பட்டன. ஆனால் இணைப்பு நடவடிக்கையை இரு அணியுமே தாமதப்படுத்துவதால் பிரிந்து கிடக்கும் கட்சி ஒன்று சேருமா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
அதிமுகவில் நிலவும் குழப்பங்கள் குறித்து அந்தக் கட்சியின் பேச்சாளர் ஆவடி குமாரிடம் நேர்காணல் கண்டது தமிழ் ஒன் இந்தியா, அதன் விவரங்கள்...
சசி, தினகரன் கட்சியில் இருந்து வெளியேற்றமா?
அதிமுகவை பொறுத்தவரை தற்போது வரை அதன் பொதுச் செயலாளர் சசிகலா தான், துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தான் அதில் எந்த மாற்றம் இல்லை. அவர்களை நீக்கும் அதிகாரம் கட்சி விதிப்படி யாருக்கும் கிடையாது, ஒரு சில எதிர்ப்புகள் காரணமாக தினகரன் தானே விலகிக் கொள்வதாகச் சொன்னதாக ஆவடி குமார் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் முடிவு
ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் உள்ளிட்ட பொதுக்குழுவினரின் நியமனத்தின் அடிப்படையிலேயே பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற நிலையில் இருக்கையில் சசிகலாவின் நியமனம் செல்லாது என்று அவர்கள் தேர்தல் ஆணையத்தில் கூறுவதால் இறுதி முடிவு தேர்தல் ஆணையத்தின் கையிலேயே இருப்பதாக குறிப்பிட்டார். எனினும் சசிகலாவை கட்சியை விட்ட வெளியேற்ற வேண்டும் என்றால் அது ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட முடியாது என்றும் பொதுக்குழுவில் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
குழப்பத்திற்கு என்ன காரணம்?
அதிமுகவில் தலைமை இல்லாமல் இருப்பதே குழப்பத்திற்கு காரணம். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்ப கட்சியில் ஆளில்லாததால் அவரவரர் தனக்கு தோன்றிய கருத்துகளை தெரிவித்து வருதாக குறிப்பிட்ட குமார், வாய்ப்பு கிடைக்காததால் யார் சிறந்த தலைவர் என்பதை உணர முடியாத நிலையிலேயே கட்சி இருப்பதாக தெரிவித்தார்.
ஓ. பன்னீர் செல்வம்
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா சிறந்த தலைவராக இருப்பார் என கருதப்பட்டார் ஆனால் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றுவிட்டதால் 4 ஆண்டுகள் அவரால் கட்சியை வழிநடத்த முடியாது. ஓ.பன்னீர்செல்வம், தான் முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் செய்த சாதனைகளை வைத்து தான் சிறந்த தலைவர் என்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி
இதுவரை வாய்ப்பு வழங்கப்படாததால் திறமையை நிரூபிக்க முடியாமல் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மக்கள் பிரச்னைகளை சிறப்பான முறையில் அணுகுவது, மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவது என சிறந்த நிர்வாகத்தை நடத்தி வருவதாகக் கூறினார்.
அணிகள் இணையுமா
ஆனால் அடுத்ததாக கட்சியை யார் வழிநடத்தி செல்ல போகிறார்கள் என்பதை காலம் தான் முடிவு செய்யும் என்றும் எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு நீடித்த சில குழப்பங்கள் விமர்சனங்கள் போலவே தான் தற்போதும் கட்சி பிளவுபட்டு கிடப்பதகாவும் கட்சி ஒன்று சேருமா சேராதா என்பது தேர்தல் ஆணைய முடிவை பொருத்தே அமையும் என்றும் குமார் கூறினார்.
அதிமுகவின் தலைவிதி யார் கையில் உள்ளது?
அதிமுகவில் சில பிரச்னைகள் இருந்ததால் தேர்தல் ஆணையம் அதை பயன்படுத்தி இரண்டு அணிகளாக பிரித்து விட்டது. எனவே இரு தரப்பும் தங்கள் அணிக்கு கட்சியின் பெயரையும், சின்னத்தையும் ஒதுக்க வேண்டும் என்று ஆணையத்தில் வாதிட்டு வருகின்ற நிலையில் சசிகலாவை நீக்குவதாக தெரிவிக்கும் பட்சத்தில் எங்கள் தரப்பின் பலம் குறைந்து விடும் என்பதால் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை ஓ.பன்னீர்செல்வம் அணி திரும்பப் பெற்றால் மட்டுமே அடுத்த கட்டமாக சுமூக பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிறார் ஆவடி குமார்.
அதிமுகவின் தலைவிதி
இரு தரப்பும் பிரமாணப்பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளதால் கட்சியின் தலைவிதி இப்போதைக்கு தேர்தல் ஆணையத்தின் கையில் உள்ளது என்றே கூறுகிறார் ஆவடி குமார்.