இறுதி வரை நம்பி இருந்தோம்... மத்திய அரசின் செயல் வருத்தம் தருகிறது... கோகுல இந்திரா வேதனை!
உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லையே என்பது வருத்தமாக இருப்பதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.
சென்னை : உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லையே என்பது வருத்தமாக இருப்பதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார். இறுதி வரை நம்பிக்கையோடு இருந்தோம் ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
காவிரி நீரை நியாயப்படி 4 மாநிலங்கள் பிரித்துக் கொள்வதை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அறிவித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் கடைசி வரை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே இல்லை.
இந்நிலையில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக செய்தித் தொடர்பாளர் கோகுல இந்திரா, நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லையே என்பது வருத்தமாக இருக்கிறது என்றார்.
நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுகவை மத்திய அரசு பொருட்படுத்தவில்லலை. தமிழக விவசாயிகளின் வாழ்வாதார, ஜீவாதார பிரச்னையான இந்த விஷயத்தில் மத்திய அரசு செவிசாய்க்கவே இல்லை.
இறுதி நேரம் வரை மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது.
முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று யாராலும் சொல்ல முடியாது. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் போட்டு அந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பினார். பிரதமரை சந்திக்க நேரம் கோரினார், கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதினார்.
நாடாளுமன்றத்திலும் எம்பிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். ராஜினாமா செய்துவிட்டால் ஏதாவது செய்யப்படுமா என்றும் கோகுல இந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.