மன்னை தந்த மகராசியே... இது வேடசந்தூர் எம்.எல்.ஏ. போஸ்டர் !
அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என ஆதரவு போஸ்டர்கள் வேடசந்தூர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன.
சென்னை: அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என அழைப்பு விடுக்கும் வகையில் ஒட்டப்படும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் அடுத்த தலைமை யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சசிகலாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் வெளிப்பட்டு வருகின்றன. அதிமுகவின் ஒரு தரப்பினர் ஆதரவு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் எதிராகவும் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் சசிகலா தலைமை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சசிகலாவே தலைமை ஏற்க வேண்டும் என அழைப்பு விடுத்து வேடசந்தூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம் பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா அரசியலுக்கு வந்த போது அவருக்கு ஆதரவாக முதன் முதலாக பொதுக் கூட்டத்தை ஏற்படுத்தியவர் தற்போதைய வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவத்தின் தந்தை முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. பாலசுப்பிரமணியம். அவர் அப்போது ஜெயலலிதாவுக்கு "திராவிட செல்வி" என பட்டம் சூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.