தூத்துக்குடி மேயர் வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு அதிமுகவினர் மிரட்டல்... பாஜக புகார்
தூத்துக்குடி: தூத்துக்குடி மேயர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஜெயலட்சுமியை போட்டியிலிருந்து விலகுமாறு கூறி அதிமுகவினர் மிரட்டல் விடுப்பதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் சரவணப்பெருமாள் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தூத்துக்குடி மேயர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக ஜெயலட்சுமி போட்டியிடுகிறார்.
மாநில பொது செயலாளர் சரவணபெருமாள் இவரை ஆதரித்து தீவிர பிராசாரம் செய்து வருகிறார். இன்று அவர் தூத்துக்குடியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது...
நெல்லையைப் போல
நெல்லை பாஜக வேட்பாளரை வாபஸ் பெற பேரம் பேசியதைப்போல தூத்துக்குடி மேயர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமியையும் வாபஸ் பெற வைக்க அதிமுக அமைச்சர் சண்முகநாதன் பல லட்சங்கள் தருவதாக
பேரம் பேசியுள்ளார். மிரட்டியும் பார்த்தார்கள்.
கடும் நெருக்கடி
வேட்பாளரை வாபஸ் வாங்க வைக்க பாஜக கவுன்சிலர் பிரபு, மாவட்ட தலைவர் கனகராஜ் ஆகியோருக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்.
விதிமுறைகளை மீறுகிறார்கள்
தேர்தல் விதிமுறைகளை மீறி அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமைச்சர்கள் தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்க வேண்டும்.
கேமரா பொருத்துங்கள்
67 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்று தெரிய வந்துள்ளதால் அனைத்து வாக்கு சாவடிகளிலும் கேமரா பொருத்த வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளோம்.
வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவார்கள்
அதிமுகவினர் வாக்குசாவடிகளை கைப்பற்றுவார்கள் என்ற அச்சம் உருவாகியுள்ளது. ஆளும் கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டும் பூத் சிலிப் வழங்கப்படுகிறது.
ஊழலைச் சொல்லி வாக்கு கேட்போம்
மாநகராட்சியில் அதிமுக செய்த ஊழல்களை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்போம். மேலும் வரும் 13ம் தேதி ஜெயலட்சுமியை ஆதரித்து, மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பிரசாரம் செய்கிறார் என்றார் அவர்.
பேட்டியின்போது வேட்பாளர் ஜெயலட்சுமி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.