அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை ஆலோசனைக் கூட்டம்... தேதி அறிவித்தார் ஜெ.
சென்னை: அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் வருகிற 26-ந் தேதி முதல் மார்ச் 3-ந் தேதி வரை நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் வருகிற 26-ந் தேதி முதல் மார்ச் 3-ந் தேதி வரை நடைபெறும்.
அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், அ.தி.மு.க. அரசின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளை பொதுமக்களிடையே விளக்குதல், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் இணைப்பு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய தேர்தல் பணிகள் மற்றும் இணைப்பு சங்கங்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொள்வது சம்பந்தமாக இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்.
அதன்படி, 26-ந் தேதி நெல்லையிலும், 27-ந் தேதி மதுரையிலும், 28-ந் தேதி திருச்சியிலும், 29-ந் தேதி கோவையிலும், மார்ச் 1-ந் தேதி தர்மபுரியிலும், 2-ந் தேதி விழுப்புரத்திலும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது.
இறுதிநாளான 3-ந் தேதி சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வடசென்னை வடக்கு, வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு, காஞ்சீபுரம் கிழக்கு, காஞ்சீபுரம் மத்தியம், காஞ்சீபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்டங்கள் பங்குபெறும்.
இந்த ஆலோசனைக் கூட்டங்கள் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.சின்னசாமி, எம்.எல்.ஏ., தலைமையிலும், அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநில நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.