அதிமுக இரு அணிகள் இன்று பேச்சுவார்த்தை.. கட்சி ஆபிசிலிருந்து சசிகலா படத்தை தூக்குவதே முதல் நிபந்தனை
அதிமுகவின் இரண்டு கோஷ்டிகள் இணைப்பு தொடர்பாக சென்னையில் இன்று சுமூக பேச்சுவார்த்தை தொடங்குகிறது.
சென்னை : அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அணியைச் சேர்ந்த 7 நபர் குழு சென்னையில் இன்று சுமூக பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
அதிமுகவில் நிலவும் கோஷ்டிப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இரு அணி தரப்பிலும் 7 நபர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் குழுவினர் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனைடியத் தொடங்குகின்றனர்.
திங்கட்கிழமையான இந்று காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை ராகு காலம் என்பதால் காலை 10 மணிக்கு மேல் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வம் அணியின் பிரதான கோரிக்கை.
இந்த கோரிக்கைக்கு எடப்பாடி அணி சம்மதம் தெரிவித்ததன் பேரிலேயே இரு அணிகளும் சந்தித்து பேச சம்மதம் தெரிவித்துள்ளன. எனினும் சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதத்தை பெற்றே தீர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தினகரனை விலக்கி வைப்பது என்ற நிபந்தனைக்கு அ.தி.மு.க. அம்மா அணி சம்மதம் தெரிவித்து விட்டதால் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என்றும் மற்ற நிபந்தனைகள் பற்றி பேச்சு நடத்தி இன்னும் 3 அல்லது 4 நாளில் உடன்பாடு எட்டப்படும் என்றும் அ.தி.மு.க. அம்மா அணி செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்தார்.
சசிகலா , தினகரன் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினர் 30 பேரை கட்சி விவகாரங்களில் தலையிடாமல் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கே.பி.முனுசாமி கூறியிருந்தார்.
இந்த நிபந்தனை தவிர முதல்- அமைச்சர் பதவி, பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்பது பேச்சு வார்த்தையின்போது முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. முதலில் இருதரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சமரச திட்டம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர்களுக்கு மந்திரி சபையில் இடம் அளிப்பது போன்ற மற்ற நிபந்தனைகளையும் ஓ.பன்னீர்செல்வம் அணி முன நிறுத்தியுள்ளது, இவற்றை ஏற்பதற்கு அ.தி.மு.க. அம்மா அணியினர் உறுதி அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஓ.பி.எஸ். அணியினர் பேச்சுவார்த்தையின்போது தினகரன், சசிகலா தொடர்பான புது நிபந்தனைகள் விதிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் சசிகலா படத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே ஓ.பன்னீர்செல்வம் அணி மீட்டிங் வருவதற்கு விதித்துள்ள நிபந்தனை என தலைமைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.