அதிமுகவுக்குத்தான் ஓட்டு போட்டீங்களா?” – சத்தியம் செய்யச் சொல்லி மிரட்டியதாக பெண்கள் புகார்!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்குதான் ஓட்டுப் போட்டீர்களா என்று சத்தியம் செய்யச் சொல்லி அதிமுகவினர் மிரட்டியதாக பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் வருகின்ற 16-ந் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், நேற்று தேர்தலின்போது அதிமுகவினர் வாக்களித்த பெண்களை மிரட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதி மணப்பாறை ஒன்றியம் பொத்தமேட்டுப்பட்டி புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு ஆண்டவர்கோவில் பூசாரிப்பட்டியை சார்ந்த பொதுமக்கள் வாக்களித்தனர்.
வாக்களித்துவிட்டு வந்த பெண்களிடம்,''அதிமுகவுக்குதான் ஓட்டு போட்டாயா? குழந்தை மீது சத்தியம் செய்'' என்று கேட்டு மிரட்டி உள்ளனர் அதிமுக விசுவாசிகள்.
இதுகுறித்து புகார் தெரிவித்த பெண்கள், ''சத்தியமா ஓட்டு போட்டீங்களான்னு கேட்டாங்க. நம்பிக்கை இல்லையான்னு கேட்டோம். காசைக் கொடுத்திடு''ன்னு மிரட்டினாங்க" என்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.