கறுப்பு பணத்தை மீட்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும்: நடிகை விந்தியா
தஞ்சாவூர்: கச்சத்தீவை மீட்க அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற செய்யுங்கள் எனக் கூறி தன் தஞ்சாவூர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் நடிகை விந்தியா.
தஞ்சை லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து, நடிகை விந்தியா சிவகங்கை பூங்கா முன்பு திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா, நல்லவர்கள், நேர்மையானவர்கள், நியாயமானவர்கள், குற்றமற்றவர்கள், மக்களுக்காக பாடுபடும் மனப்பான்மையில் யார், யார் என்பதை கண்டறிந்து அவர்களை நாடாளுமன்ற வேட்பாளர்களாக அறிவித்துள்ளார். மற்ற கட்சியினர் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள், செல்வந்தர்களை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளனர்.
பிரதம வேட்பாளர் யார் என்று தெரியாமலே தி.மு.க. கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும், விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் வாயு திட்டத்தை கொண்டு வந்தபோதும், காங்கிரசோடு தி.மு.க கூட்டணி வைத்து இருந்தது. மேலும் கச்சத்தீவை தாரை வார்த்ததும், 2ஜி உள்பட பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதும் தி.மு.கவினர் தான். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினரும் உறுதுணையாக இருந்தனர்.
அதேபோல், தே.மு.தி.க. கட்சியிலும் உறுதியான நிலைப்பாடு இல்லை. அந்தக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களே இன்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் அ.தி.மு.கவில் இணைந்து வருகிறார்கள்.
எனவே, தமிழக மக்களை காப்பாற்ற, மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க, கச்சத்தீவை மீட்க, விவசாயிகளின் நலனுக்காக மீத்தேன் வாயு திட்டத்தை ரத்து செய்ய, வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தை மீட்க முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமராக வரவேண்டும்.
அதற்கு தஞ்சை தொகுதியில் நீங்கள் அ.தி.மு.க. வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் விந்தியா.