நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கமாட்டோம்... முதல்வர் எடப்பாடி சூசகம்
பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சேலம்: பாஜக அரசுக்கு ஆந்திர அரசு கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஒன்று கூடி இருக்கிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறது.
நாளை இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இதனால் இப்போதே அரசியலில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் இந்த வாக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதிமுக கட்சியும் இந்த வாக்கெடுப்புக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், ஆந்திர மாநில எம்.பிக்கள் அந்த மாநில பிரச்சினைக்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளனர்.
காவிரி பிரச்சினையில் அதிமுக எம்.பிக்கள் போராடியபோது எந்த மாநிலமும் ஆதரவளிக்கவில்லை. ஆந்திர எம்பிக்கள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்றார் எடப்பாடி.