100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சிதான்.. அடித்து சொல்லும் அமைச்சர்!!
ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகதான் இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் வரலாறு படைக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை: ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகதான் இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் வரலாறு படைக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை தனக்கன்குளத்தில் அதிமுக பிரசார சைக்கிள் பேரணி தொடக்கவிழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, தங்கமணி, ராஜேந்திரபாலஜி, சேவூர் ராமச்சந்திரன், பாஸ்கரன் மற்றும் ராஜலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய அமைச்சர் தங்கமணி தமிழகத்தில் தற்போது சீராக மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அறிவிப்பில்லா மின்வெட்டை கண்டுபிடித்தவர்களே திமுகவினர்தான் என சாடினார்.
மேலும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் மற்ற அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழக்கும். திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை என்றார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ஊழல் குற்றச்சாட்டு கூறுபவர்கள் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும். ஆர்கே நகரில் குறுக்கு வழியில் வெற்றிபெற்றதுபோல் தினகரனால் வரும் தேர்தல்களில் வெற்றிபெற முடியாது என சவால் விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெயலலிதா கட்டிகாத்த அதிமுக தான் இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் சாதனை படைக்கும் என அடித்துக்கூறினார்.