40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: சரத்குமார்
திருக்கடையூர்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும் என அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகரும், நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு 60 வயதாகப் போகிறது. இதையொட்டி அவர் தனது மனைவி சகிதம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஹோமம் வளர்த்து சாமி கும்பிட்டார்.
சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து நாங்கள் அங்கம் வகிக்கிற அதிமுக தலைமையிலான கூட்டணி தலைவர்தான் முடிவு செய்வார்.
வரும் 16 ந்தேதி நெல்லையில் கட்சியின் 2 வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா நாற்பதும் நமக்கே என்று சொன்னதை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டிய நிலைகள் குறித்து இந்த மாநாட்டில் முடிவு செய்யப்படும்.
கச்சத்தீவு மீட்கப்பட வேண்டிய ஒன்று. அதை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார்' எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் நரேந்திர மோடியின் தாக்கத்தால் பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி அமையும் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒரு சிறந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் மத்தியிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆகையால் ஜெயலலிதா சொன்னதுபோல் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் உறுதியாக வெற்றி பெறும்' எனப் பதிலளித்தார்.