1 லட்சம் 'லட்சியத்தில்' குறைந்து போன வாக்குகள்: யார் தலை உருளப்போகுதோ?
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலின் இறுதிநாள் பிரச்சாரத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், "ஒண்ணேகால் லட்சம் லட்சியம்... ஒரு லட்சம் நிச்சயம் என்று குறிப்பிட்டார்.
96,515 வாக்குகள் பெற்று திமுகவின் ஆனந்தனை தோற்கடித்தார் அதிமுகவின் வளர்மதி... லட்சியத்தில் சில ஆயிரம் வாக்குகள் குறைந்து போனதே? என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று உதறல் எடுத்துப்போயுள்ளனர் தேர்தல் பணிக்குழுவில் சுறுசுறுப்பை மிஸ்பண்ணிய சில அமைச்சர்கள்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே பரபரப்பு பற்றிக்கொண்டது. அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர்.களவியூகம் அமைக்கத் தொடங்கிவிட்டனர்.
ஆரம்பம் முதலே பிரச்சாரத்தில் அனல் பறந்தது. சுயேச்சையாக நின்ற டிராபிக் ராமசாமியும் அவ்வப்போது புகார்மனு அனுப்பி தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய வைத்தார். இதுவும் அதிமுகவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
பணப்பட்டுவாடா வேட்டை ஒருபக்கம் நடக்க மறுபுறம் டோக்கன்களாகவும், குடங்களாகவும், மூக்குத்திகளாகவும் வாக்காளர்களுக்கு வந்து சேர்ந்தன. இதனால் பிப்ரவரி 11ஆம் தேதிவரை ஸ்ரீரங்கத்தில் திருவிழா கோலம்தான்.
துணை ராணுவப்படை, போலீஸ்பாதுகாப்பு, பறக்கும் படை என எத்தனை படைகள் சுத்திவந்தாலும் நாங்க செய்யுற வேலையை சுத்தமாக செய்வோம் என்று அதிமுகவினரும், திமுகவினரும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்தனர்.
பணபலத்திலும், படைபலத்திலும், அதிமுக, அதிமுக உடன் போட்டி போட முடியாத பாஜக, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களால் பாவம் புகார்தான் அனுப்ப முடிந்தது.
மாணவர்களுக்கு அடித்த லக்
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ,கல்வி அமைச்சர் வீரமணி பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் கொடி பிடித்தனர். அவர்களை 'ஸ்பெஷலாக' கவனித்து அனுப்பினார்கள்.
அடடே பேலன்ஸ் எகுறுதே
ஒரு நோட்டில் வாக்காளர் பெயர், அவரது புகைப்படத்தையும் ஒட்டி பக்கத்தில் அவரது செல்போன் எண்ணை குறித்துக்கொண்டனர். ப்ரீபெய்டு எண் வைத்திருந்தவர்களுக்கு மட்டும் அதிர்ஷ்ட தேவதை டிக் அடிக்க, அவர்களின் செல்போன்களில்திடீர் திடீரென பேலன்ஸ் அதிகமானது.
குமுறும் திமுக
அதிமுகவினர் ஒருபுறம் வாக்காளர்களை அட்டாக் செய்ய, திமுகவினரோ, வேறுவிதமாக அணுகினர். முத்தரசநல்லூர் பகுதியில் தி.மு.கவினர் விநியோகித்த நீலம், சிவப்பு நிற டோக்கன்களை ஆளும் கட்சியினர் கைப்பற்றினார்கள். அதில் 'நீ கோ' என்று சங்கேத மொழியில் இருந்ததால், அதற்கு அர்த்தம் புரியாமல் குழப்பமடைந்தனர்.
குங்குமச்சிமிழுக்கு குடம்
ஆளும்கட்சியினர் குங்குமச்சிமிழ் கொடுக்க அவர்களுக்கு போட்டிய போட்டியாக, தி.மு.கவினர் டோக்கன்களை விநியோகித்தார்களாம். சில வீடுகளுக்கு சில்வர் குடங்களை கொடுத்து மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்கு வந்தபோது, கையில் குடத்துடன் வரவேண்டும் என்று கண்டிஷன் வேறாம் அப்படியே வந்தவங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்ததாம்.
நீல டோக்கனுக்கு ரூ.200
இது தவிர நீல நிற டோக்கன்களை வீடு வீடாக விநியோகித்தார்களாம். 'அடுத்தநாள் மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்கு வரும்போது இந்த டோக்கனுடன் வாருங்கள். அங்கே சஸ்பென்ஸ் காத்திருக்கும்' என்றார்களாம். ஆவலுடன் மக்கள் திரண்டு போனார்களாம். அங்கே, நீல நிற டோக்கனை வாங்கிக்கொண்டு தலைக்கு ரூபாய் 200 வழங்கினார்கள்.
சிவப்பு டோக்கனுக்கு சேலை
அத்துடன், சிவப்பு நிற டோக்கனைக் கொடுத்து, 'இன்று இரவு வேஷ்டி, சேலை உங்களைத் தேடிவரும். அப்போது, சிவப்பு டோக்கனைக் கொடுத்து அவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்றார்களாம். அப்படியே நடந்ததாம்!''
1,760000 கோடி
ரூபாய் நோட்டு வடிவில் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ்தான் அதிகம் பேசியது. 2ஜி ஊழலை விளக்கும் வகையில் எழுதப்பட்ட வாசகங்கள் இருந்தன. கருணாநிதி, கனிமொழி, ஆ.ராசா ஆகியோரின் புகைப்படங்கள் அந்த நோட்டீஸில் இருந்தன.
புகார் சொன்ன கனிமொழி
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் எச்.எஸ். பிரம்மாவை சந்தித்து புகாரளித்த கனிமொழி, ''ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுகவினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அதிமுகவினரால் வாக்காளர்களுக்கு வேட்டி,சேலை, மது வகைகள், உணவு ஆகியவை விநியோகம் செய்யப்படுகிறது என்று கூறினார்.
கனிமொழியின் மகளிரணியினர்
அதேநேரத்தில் திமுகவின் மகளிரணியினர், விநியோகித்த வேட்டி, சேலைகளை கொத்தாக அள்ளினர் அதிமுகவினர். அவர்களை கத்தியால் குத்தி காயப்படுத்தி கைது வரை சென்றனர் திமுகவின் மகளிரணியினர்.
தேர்தல் நாளிலும்
பெருகமணியில் வாக்காளருக்கு பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணப்பட்டுவாடா செய்ய வீட்டில் பதுங்கி இருந்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வென்ற வளர்மதி
விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகவே யாருக்கு எவ்வளவு ஒட்டுக்களோ என்று அனைவரின் பல்ஸ்சும் எகிறியது. இரண்டு நாள் சஸ்பென்ஸ்சுக்குப் பின்னர் நேற்று விடை தெரிந்தது. அதிமுக வேட்பாளர் எஸ்.வளர்மதி மொத்தம் 1,51,561 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். திமுக வேட்பாளர் என்.ஆனந்த் 55,045 வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
ஆயிரத்துக்குள்ள அமுக்கணும்
பாஜகவை ஆயிரம் வாக்குகள் கூட வாங்க விடக்கூடாது என்பதுவும் முக்கியமான அசைன்மெண்டாம் ஆனால் எப்படி ஐயாயிரம் வாக்குகள் வாங்கியது என்று கேள்வி எழுந்துள்ளது.
டிராபிக் ராமசாமி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.அண்ணாதுரை 1552 வாக்குகளும் பெற்றனர். 'நோட்டா'வுக்கு மொத்தம் 1919 வாக்குகள் கிடைத்தன. கடைசிவரை பிரச்சார களத்தில் கலக்கிய சுயேச்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி 1167 வாக்குகள் பெற்றார்.
யார் தலை உருளுமோ?
லட்சியத்தில் சில ஆயிரம் வாக்குகள் குறைந்துபோனதால் யார் தலை உருளாப்போகுதோ என்ற அச்சமும் சில அமைச்சர்களுக்கு எழாமல் இல்லை. அதைவிட தேர்தல் பிரச்சாரத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அமைச்சரும், திருச்சி ஹோட்டலில் ஏசி ரூமில் ரெஸ்ட் எடுத்த அமைச்சருக்கும் மாசி அமாவாசைக்குள் மண்டகப்படி நிச்சயம் என்கின்றனர்.
குடம் போச்சே
அதிமுகவினரின் கதை இப்படி இருக்க குடுத்த குடத்துக்கு கூட ஓட்டு விழுகலையோ... கடந்தமுறை வாங்கிய ஓட்டுக்களை விட இந்தமுறை கம்மியாத்தானே வாங்கியிருக்கோம் என்று குமுறுகின்றனர் திமுகவினர்.
ஸ்ஸ்ஸ் அப்பாடா
ஒருவழியா ஓஞ்சதுப்பா... இப்போதைக்கு கொஞ்சம் டென்சன் இல்லாம இருக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்துள்ளார் தமிழக தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா. இப்போதைக்கு இடைத்தேர்தல் வராம இருக்கணுமே? ஆனால் இடைத்தேர்தலில் பணப்புழக்கத்தைப் பார்த்த வாக்காளர்கள், எங்க எம்.எல்.ஏ எப்போ சாவாரு? என்கிற ரீதியில்தானே யோசிக்கின்றனர்.