'வடக்கை'க் கைப்பற்ற முடியாத அதிமுக.. முதல் முறையாக வட சென்னையைக் கைப்பற்றியது!
சென்னை: வடக்கில் கோலாச்சி பிரதமர் பதவியைப் பிடிக்க முதல்வர் ஜெயலலிதா கடுமையாக முயன்று அது முடியாமல் போய் விட்ட நிலையில் திமுகவின் பல கோட்டைகளை அதிமுக கைப்பற்றி ஆறுதல் கொடுத்துள்ளது. அதில் ஒன்றாக வட சென்னை திகழ்கிறது.
சென்னையில் உள்ள வட சென்னை இதுகாலம் வரை திமுக வசம் இருந்து வந்தது. தற்போது அதை அதிமுக கைப்பற்றியுள்ளது.
பெரும்பாலும் இத்தொகுதியில் அதிமுக போட்டியிட்டதில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி விடும். இதுவரை மொத்தமே 3 முறைதான் அங்கு போட்டியிட்டுள்ளது. இரண்டில் தோல்வியுற்றது. மூன்றாவது முறையாக தற்போது வெற்றி பெற்றுள்ளது.
10 முறை திமுகவே
இத்தொகுதியில் இதுவரை நடந்துள்ள 15 தேர்தல்களில் 10 முறை திமுகவே வெற்றி பெற்று அசைக்க முடியாத நிலையில் இருந்து வந்தது.
3 முறை காங்கிரஸ்
3 முறை காங்கிரஸ்இங்கு வென்றுள்ளது. முதல் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக அந்தோணி பிள்ளை என்பவர் வெற்றி பெற்றார்.
முதல் முறையாக அதிமுக வெற்றி
இந்த நிலையில் தற்போது நடந்துள்ள தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டி.ஜி.வெங்கடேஷ் பாபு வென்றுள்ளார்.
5 தேர்தலாக திமுக வசம்
இந்தத் தொகுதி கடந்த 5 தேர்தல்களாக திமுகவிடமே இருந்து வந்தது. அதில், செ.குப்புசாமி 3 முறை எம்.பியாக இருந்தார். கடைசியாக டி.கே.எஸ். இளங்கோவன் உறுப்பினராக இருந்து வந்தார்.