ஜெயலலிதாவின் கைரேகை + கையெழுத்தை மட்டும் காட்டி இடைத் தேர்தலில் கலக்கிய அதிமுக! #AmmaTriumphs
இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க முடியாத சூழ்நிலையில் அவரது கையெழுத்தும், கைவிரல் ரேகையுமே முன்னிலை வகித்தது.
சென்னை: உடல் நிலை சரியில்லாமல் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
தமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்க்கு கடந்த 19ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா நேரடியாக செல்லவில்லை என்றாலும் 5 ஆண்டுகாலமாக செய்த ஜெயலலிதா செய்த சாதனைகள் அவர் தொடங்கி வைத்த நலத்திட்ட உதவிகளின் வீடியோக்களை இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பட்டி தொட்டி எங்கும் ஒளிபரப்பியது அதிமுக பிரச்சாரக்குழு
வேட்புமனுவில் கைரேகை
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருமே அப்பல்லோவில் தவமிருந்தனர். இந்த சூழ்நிலையில்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டிய மனுவில் வேட்பாளர்களுக்கான சில படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகை முதன் முறையாக இடம் பெற்றது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருமாதகாலத்திற்குப் பின்னர் முதன் முதலாக ஜெயலலிதாவின் கைரேகை வெளியானது. ஆனால் அது ஜெயலலிதாவின் கைரேகை தானா? என்ற சந்தேகத்தை எழுப்பினர் எதிர்கட்சியினர்.
ஜெயலலிதாவின் மறுபிறவி அறிக்கை
இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒருவாரம் மட்டுமே இருந்த நிலையில் மக்களின் பிரார்த்தனையால் மறுவாழ்வு பெற்றுள்ளதாகவும் நலம் பெற்று திரும்புவேன் எனவும் மக்களின் பேரன்பு இருக்கும்போது எந்த குறையும் தனக்கில்லை. வெகுவிரைவில் முழுமையான நலம்பெற்று பணிக்கு திரும்பி வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன் என்றும் அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா. முதலில் அந்த அறிக்கை ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லாமல் வெளியானது. பின்னர் ஜெயலலிதாவின் கையெழுத்துடன் வெளியானது.
|
கலக்கிய அதிமுக
ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வராவிட்டாலும் டெக்னிகலாக பிரச்சாரத்தில் கலக்கினர் அதிமுகவினர். ஜெயலலிதாவின் கையெழுத்து அடங்கிய அறிக்கையை மிகப்பெரிய ப்ளெக்ஸ் பேனராக போட்டு பல பகுதிகளில் வைத்தனர். அதனை நோட்டீஸ் வடிவில் அச்சடித்து கொடுத்தனர்.
|
டிவியில் பேசிய ஜெயலலிதா
இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் எல்லாம் கிராமங்கள் தோறும் ஜெயலலிதாவின் ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. வாட்ஸ்அப்பில் பிரச்சாரம் செய்தனர் ஐடி அணியினர். ஜெயலலிதாவை டிவியில் பார்த்து தொட்டு வணங்கினர் பல தொண்டர்கள்.
முகம் காட்டாமல் ஜெயித்த ஜெ..
இடைதேர்தல் பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா நேரில் வந்து தனது முகத்தை காட்டவில்லை. ஆனால் வெறும் கைரேகையும், கையெழுத்துமே வாக்கு சேகரித்தது. அதேபோல எம்.ஜி.ஆரின் இரட்டை இலை சின்னத்தை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டுள்ள அதிமுக தொண்டர்கள் தங்களின் வாக்குகளை அளித்துள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து எம்.ஜி.ஆர்
1984ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற்ற போது அப்போதய முதல்வர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த வீடியோக்கள் பிரச்சாரத்தில் முக்கிய பங்காற்றியது. மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் எம்.ஜி.ஆர்.
அப்பல்லோவில் ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அப்பல்லோவில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் ஜெயலலிதா. தனது முகம் காட்டாமலேயே எம்.ஜி.ஆரைப் போல சாதனை வெற்றியைப் பெற்றுள்ளார் ஜெயலலிதா.