தஞ்சை தொகுதியை அபார வெற்றியுடன் மீண்டும் தக்க வைத்த அதிமுகவின் ரங்கசாமி!
தஞ்சாவூர்: மறுதேர்தலை எதிர்கொண்ட தஞ்சாவூர் தொகுதியில் 26 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் தொகுதியை தக்க வைத்துள்ளார் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி.
சட்டசபை பொதுத்தேர்தலின் போது தஞ்சாவூர் தொகுதியில் பணபட்டுவாடா புகார் எழுந்தது. இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அப்போது அதிமுக வேட்பாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான ரங்கசாமி மீது கடும் அதிருப்தி இருப்பதாகவும் அவர் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. அப்போது திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் ஊடகங்கள் எழுதின.
மீண்டும் ரங்கசாமி போட்டி
ஆனால் தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட இருந்த நிலையில் சசிகலா நடராஜன் அங்கு அதிமுக வேட்பாளராக போட்டியிடலாம் என பேச்சுகள் அடிபட்டது. பின்னர் ரங்கசாமியே வேட்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அஞ்சுகம் பூபதி
திமுக தலைமையைப் பொறுத்தவரையில் 29 வயதான அஞ்சுகம் பூபதி மீது நம்பிக்கை வைத்து மீண்டும் சீட் கொடுத்தது. ஆனால் திமுகவின் நம்பிக்கை பொய்த்துப் போனது.
வெறும் 7 ஆயிரம் வித்தியாசம்
கடந்த 2011-ம் தேர்தலில் இதே ரங்கசாமியை எதிர்த்து திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா போட்டியிட்டார். ரங்கசாமி வெற்றி பெற்றிருந்தாலும் வாக்கு வித்தியாசம் என்பது வெறும் 7329 மட்டுமே. ரங்கசாமி 75,415 வாக்குகளையும் திமுகவின் உபயதுல்லா 68,086 வாக்குகளையும் பெற்றிருந்தார்.
26 ஆயிரம் வித்தியாசம்
ஆனால் இம்முறையோ ரங்கசாமி சுமார் 26,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியை பெற்றிருக்கிறார். அதிமுக மீண்டும் வெற்றி பெற்றபோதும் வாக்கு வித்தியாசம் கடந்த முறையைவிட பல மடங்கு அதிகமாக இருப்பது என்பது திமுகவுக்கு பெரும் பின்னடைவுதான்.