ஆகஸ்ட் 5ல் அதிமுக தலைமை அலுவலகம் வரும் டிடிவி தினகரன்... அடிதடி நடக்குமா?
டிடிவி தினகரன் ஆகஸ்டு 5ஆம் தேதி முதல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து மீண்டும் கட்சி பணியில் தீவிரம் காட்டுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: டிடிவி தினகரன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்தித்து பேசுவார் என்று அவரது ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 5 முதல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து டிடிவி தினகரன் வந்து கட்சிப்பணியாற்றுவார் என்று தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளதால் அந்த நாளில் அடிதடி அரங்கேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திஹார் சிறைக்கு செல்லும் முன்பாக கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டதாக கூறிய தினகரன், ஜாமீனில் வெளி வந்த பின்னர் கட்சிப்பணியில் தீவிரம் காட்டப்போவதாக கூறினார். ஆனால் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்லவில்லை.
இரு அணிகளும் இணைவதற்கு டிடிவி தினகரன் கொடுத்த 60 நாள் கெடு ஆகஸ்டு 5ஆம் தேதியுடன் முடிவதால் அன்றைய தினத்தில் இருந்து கட்சிப் பணியில் தீவிரம் காட்ட தொடங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
நிர்வாகிகளுடன் சந்திப்பு
திஹார் சிறையில் இருந்து ஜாமீன் வெளியே வந்த பின்னர் அணிகள் இணைவதற்கு 60 நாட்கள் கெடு விதித்த தினகரன், தனது பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 37 பேர் தினகரனை தினசரியும் சந்தித்து பேசி வருகின்றனர். சில எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக பேட்டி அளித்து வருகின்றனர்.
60 நாட்கள் கெடு
தினகரன் அறிவித்த 60 நாள் கெடு ஆகஸ்டு 5ஆம்தேதியுடன் முடிவதால் அன்றைய தினத்தில் இருந்து கட்சிப் பணியில் தீவிரம் காட்ட தொடங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதற்கு அமைச்சர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தங்க தமிழ் செல்வன்
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. தங்க தமிழ் செல்வன், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்காக துணைப் பொதுச்செயலாளர் கால அவகாசம் கொடுத்து ஒதுங்கி இருந்தார். அவர் அறிவித்த 60 நாள் கெடு விரைவில் முடிய உள்ளது என்றார்.
தினகரன் வருகை
ஆகஸ்டு 5ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து மீண்டும் கட்சி பணியில் தீவிரம் காட்டுவார். அது மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் சென்று கட்சித் தொண்டர்களை சந்திக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பொதுக் கூட்டங்களிலும் பேசுவார் என்று கூறியுள்ளார்.
அடிதடி அரங்கேறுமா?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பாவின் கணவர், கட்சி தலைமை அலுவலகத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்த போது அடிதடி ஏற்பட்டது. அதிமுக பெண் நிர்வாகிகள், தாக்கியதில் சசிகலா புஷ்பாவின் கணவர் மூக்கு உடைந்தது.
தினகரனை தடுப்பார்களா?
அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் டிடிவி தினகரன் ஆகஸ்ட் 5ஆம் தேதி அதிமுக அலுவலகத்திற்கு வரப்போவதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள், அமைச்சர்கள் தினகரனை தடுத்து நிறுத்துவார்களா? இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு நிகழ வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.