சட்டிக்கருப்பு கோவில்.. 25 ஆடு, 250 கோழி வெட்டி பலி .. பரமேஸ்வரி எம்.எல்.ஏவின் பரபர விருந்து!
திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எம். பரமேஸ்வரி கொடுத்த கறி விருந்தும், கோவில் விழாவும்தான் தற்போது மாவட்டத்தையே பரபரப்பாக்க வைத்துள்ளது.
25 ஆடுகளையும், 250 கோழிகளையும் வெட்டி கடவுளுக்குப் படையலிட்டு கறிச்சோறு ஆக்க விருந்து கொடுத்து அதிமுகவினரையே அசர வைத்துள்ளராம் பரமேஸ்வரி.
காவிரி நீர் தமிழகத்திற்கு வர வேண்டும் என்ற கோரிக்கைக்காக இந்த விருந்து, பலியா என்று நீங்கள் கேட்டால்..ம்ஹூம்.. அதுக்கெல்லாம் இல்லையாம், மாறாக தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் விருந்து போட்டு அசத்தி விட்டாராம் பரமேஸ்வரி.
பரமேஸ்வரி
மண்ணச்சநல்லூர் பரமேஸ்வரி முருகன் முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனவர். எல்லா அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் வரும் சராசரிக் கனவுதான் இவருக்கும். எப்படியாவது அமைச்சர் ஆகி விட வேண்டும் என்பதுதான் அது. இந்த நோக்கில்தான் அவர் தொடர்ந்து "அம்மா"வின் கவனத்தைக் கவரும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
வெற்றி விழா
இந்த நிலையில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் துறையூர் சாலை பூனாம்பாளையத்தில் உள்ள சட்டிக்கருப்பு கோவிலில் கிடா வெட்டி விருந்து படைப்பதாக நேர்த்திக் கடன் நேர்ந்திருந்தாராம் பரமேஸ்வரி. இதை தற்போது நிறைவேற்றியுள்ளார். அதில் என்ன விசேஷம் என்றால் அந்த கிடா வெட்டின் பிரமாண்டம்தான்.
25 ஆடு.. 250 கோழி
25 கிடாக்களையும், 250 கோழிகளையும் வெட்டிப் பலியிட்டு இந்த நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார் பரமேஸ்வரி. அதைத் தொடர்ந்து நடந்த விருந்தின் மணம் இன்னும் சாப்பிட்டவர்களின் கைகளை விட்டுப் போகவில்லையாம்.
ஸ்பாட்டில் வைத்து 4 ஆட்டைப் போடு!
இருப்பினும் மொத்தமாக அத்தனை ஆடு, கோழிகளையும் கோவிலில் வைத்துப் பலியிட்டால் எதிரிகள் பஞ்சாயத்து கிளப்பி விடுவார்கள் என்பதால் சாம்பிளுக்கு 4 ஆடுகளை மட்டுமே கோவிலில் பலியிட்டார்களாம். மற்றவற்றை வேறு எங்கோ வைத்து வெட்டி பிரியாணியாக ஸ்பாட்டுக்குக் கொண்டு வந்து பரிமாறினராம்.
பரமேஸ்வரி கையால்
பரமேஸ்வரியே தனது கையால் விருந்து பரிமாறி கட்சியினரை மகிழ்வித்துள்ளார். தனியார் மண்டபம் ஒன்றில் வைத்து மட்டன் பிரியாணி, கோழி வருவல் என தடபுடலாக அதிமுகவினரைக் கவனித்து குஷிப்படுத்தியுள்ளது பரமேஸ்வரி குடும்பம்.
3 மணி நேரம்.. 3000 பேர்
3 மணி நேரம் இந்த விருந்து நடந்துள்ளது. மாஜி அமைச்சர்கள், மாஜி எம்.எல்.ஏக்கள், மாவட்டம், நகரம், ஒன்றியம், வட்டம் என்று பல தரப்பினர் கிட்டத்தட்ட 3000 பேர் வரை விருந்து சாப்பிட்டுச் சென்றுள்ளனர். வெற்றி விழா என்ற பெயரில் விருந்து போட்டாலும் கூட பரமேஸ்வரி மனசு முழுக்க அமைச்சர் ஆசைதான் நிரம்பிக் கிடக்கிறதாம். அதை மனதில் வைத்துத்தான் இந்த பலி விருந்து என்று பலர் முனுமுனுக்கிறார்கள்.