இன்று ஜெயலலிதாவின் நட்சத்திர பிறந்தநாள்...மாசி மகத்தை மறந்துட்டாங்களே!
ஜெயலலிதாவின் நட்சத்திர பிறந்தநாளை அதிமுகவினர் மறந்து விட்டனர். மாசி மகம் ஜெயலலிதா பிறந்தநாளாகும்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பிப்ரவரி 24ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டாலும் மாசி மாதம் மகம் நட்சத்திர தினத்தன்றும் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு மகம் நட்சத்திரத்தை அதிமுகவினர் மறந்து விட்டனர்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை மகத்தில் பிறந்த மகராசி என்று அதிமுகவினர் கொண்டாடி வந்தனர். கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று ஜெயலலிதா மரணமடைந்தார். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாள் அதிமுகவினருக்கு சோகநாளாக முடிந்தது.
இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதியன்று அதிமுகவினர் ஜெயலலிதா பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர். ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட்டது.
மாசி மகம்
ஜெயலலிதா பிறந்த நட்சத்திரம் மகம். மாசி மாதம் மகம் நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. ஆண்டு தோறும் நட்சத்திர பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடுவார்கள். கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அன்னதானம் களைகட்டும்.
சிறப்பு யாகங்கள்
கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா உயிரோடு இருந்தார். அப்போது தமிழகம் முழுவதும் கோவில்களில் ஆயுஷ்ய ஹோமம் நடைபெற்றது. மொடக்குறிச்சி சாவடிபாளையத்தில் உள்ள, நட்டாற்றீஸ்வரர், சாமூண்டீஸ்வரி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
மறந்து போன அதிமுகவினர்
இந்த ஆண்டு ஜெயலலிதா உயிரோடு இல்லை என்பதால் மகம் நட்சத்திரத்தை அதிமுகவினர் மறந்தே போய் விட்டனர். எந்த கோவிலிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதாக தெரியவில்லை. அன்னதானமும் கொடுக்கவில்லை.
மண் சோறு சாப்பிட்டார்களே
ஜெயலலிதா சிறையில் இருந்த போதும், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போதும் அதிமுகவினர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மகளிரணியினர் கோவில் கோவிலாக ஏறி இறங்கினர். மண் சோறு சாப்பிட்டனர், தீ சட்டி ஏந்தினர். இப்போதே நட்சத்திர பிறந்தநாளையே மறந்து விட்டனர். அப்போது கடந்த காலங்களில் அதிமுகவினர் செய்தது எல்லாம் நடிப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.